இந்திய-ஆரியப் புலப்பெயர்வு
இந்தியத் துணைக் கண்டத்துக்குள் இந்தோ-ஆரியரின் இடம் பெயர்வு / From Wikipedia, the free encyclopedia
இந்தோ-ஆரியப் புலப்பெயர்வு[note 1] என்பது இந்தியத் துணைக் கண்டத்துக்குள் இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசிய ஓர் இனமொழிக் குழுவான இந்தோ ஆரியர் இடம் பெயர்ந்ததைக் குறிப்பதாகும். இம்மொழிகளே தற்போதைய வங்காளதேசம், மாலைத்தீவுகள், நேபாளம், வட இந்தியா, கிழக்கு பாக்கித்தான் மற்றும் இலங்கையின் முதன்மையான மொழிகளாக உள்ளன.
நடு ஆசியாவிலிருந்து இப்பகுதிக்குள் இந்தோ ஆரிய இடம் பெயர்வானது பொ. ஊ. மு. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கியதாகக் கருதப்படுகிறது. பிந்தைய அரப்பா காலகட்டத்தின்போது ஒரு மெதுவான பரவலாக இது நடைபெற்றது. வட இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு மொழி நகர்வுக்கு இது இட்டுச் சென்றது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானியப் பீடபூமிக்குள் ஈரானியர்களால் ஈரானிய மொழிகள் கொண்டு வரப்பட்டன. ஈரானியர்கள் இந்தோ-ஆரியருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆவர்.
ஆதி-இந்தோ-ஈரானியப் பண்பாடானது இந்தோ-ஆரியர் மற்றும் ஈரானியர்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இது காசுப்பியன் கடலுக்கு வடக்கே நடு ஆசியப் புல்வெளிகளில் தற்போதைய உருசியா மற்றும் கசக்கத்தானில் சிந்தசுதா பண்பாடாக (அண். 2200-1900 பொ. ஊ. மு.)[2] வளர்ச்சியடைந்தது. பிறகு மேலும் அன்ட்ரோனோவோ பண்பாடாக (2000–1450 பொ. ஊ. மு.) வளர்ச்சியடைந்தது.[3][4]
இந்தோ-ஆரியர்கள் பொ. ஊ. மு. 2000 மற்றும் பொ. ஊ. மு. 1600ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏதோ ஒரு நேரத்தில் இந்தோ-ஈரானியர்களிடம் இருந்து பிரிந்தனர்.[5] தெற்கே பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகத்தை நோக்கி இடம் பெயர்ந்தனர். இங்கிருந்து தான் இவர்கள் தங்களது சில தனித்துவமான சமய நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பெற்றனர்.[6] இந்த வளாகத்தில் இருந்து இந்தோ-ஆரியர்கள் வடக்கு சிரியாவிற்கு மற்றும் அநேகமாக பல்வேறு அலைகளாகப் பஞ்சாப் பகுதிக்குள் (வடக்கு பாக்கித்தான் மற்றும் இந்தியா) இடம் பெயர்ந்தனர். அதே நேரத்தில் ஈரானியர்கள் மேற்கு ஈரானை பொ. ஊ. மு. 1300ஆம் ஆண்டுக்கு முன்னர் அடைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[7] இந்த இரு குழுக்களுமே தங்களுடன் இந்தோ-ஈரானிய மொழிகளைக் கொண்டு வந்தனர்.
மேற்குலக மற்றும் இந்திய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் குறிப்பிடப்பட்ட போது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய மக்களின் இடம் பெயர்வானது நடைபெற்றது என்பது முதன்முதலில் ஒரு கோட்பாடாக வைக்கப்பட்டது. இத்தகைய ஒற்றுமைகளைக் கொண்டு இம்மக்களின் தாயகத்தின் ஓர் ஒற்றைத் தோற்றமானது முன் வைக்கப்பட்டது. பூர்வீகத் தாயகத்திலிருந்து வந்த இடம் பெயர்ந்தவர்களால் இம்மொழிகள் மெதுவாகப் பரவியது என்று குறிப்பிடப்பட்டது.
இந்தக் கோட்பாட்டின் இந்த மொழியியல் வாதமானது தொல்லியல், மானுடவியல், மரபணுவியல், இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழலியல் ஆய்வுகளால் ஆதரவளிக்கப்படுகிறது. இந்திய மக்கள்தொகையின் பல்வேறு அங்கங்களின் தோற்றம் மற்றும் பரவலின் ஒரு சிக்கலான மரபணுப் புதிரின் ஒரு பகுதியாக இந்த புலப்பெயர்வுகள் உள்ளன என்பதை மரபணு ஆய்வானது வெளிக்காட்டுகிறது. வேறுபட்ட, புவியியல் ரீதியாக தனித்துவமான, இந்தோ-ஆரிய வரலாற்றுப் பண்பாடுகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை இலக்கிய ஆய்வானது வெளிக்காட்டுகிறது. ஐரோவாசியப் புல்வெளி மற்றும் இந்தியத் துணைக்கண்டம்[web 1] ஆகிய இரு பகுதிகளிலும் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழலியல் மாற்றங்களுக்கு வழி வகுத்த பரவலான வறட்சியானது பொ. ஊ. மு. 2வது ஆயிரமாண்டுகளில் ஏற்பட்டது என்பதை சுற்றுச்சூழலியல் ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. தெற்கு நடு ஆசியா, ஆப்கானித்தான், ஈரான் மற்றும் இந்தியாவில் நிலையான இடத்தில் வாழ்ந்த நகர்ப்புறப் பண்பாடுகளின் வீழ்ச்சிக்கு இது காரணமானது. பெருமளவிலான புலப்பெயர்வுகளைத் தூண்டியது. நகர்ப்புறப் பண்பாட்டு காலத்துக்குப் பிந்தைய கால மக்களுடன் இடம் பெயர்ந்து வந்த மக்கள் இணைவதில் இது முடிவடைந்தது.[web 1]
இந்தோ-ஆரிய புலப்பெயர்வுகள் தோராயமாக 2000 முதல் பொ. ஊ. மு. 1600க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஏதோ ஒரு நேரத்தில் போரில் பயன்படுத்தப்படும் இரதங்கள் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தொடங்கியது.[5] இந்தோ-ஆரிய மொழிகளை லெவண்ட் மற்றும் அநேகமாக உள் ஆசியாவிற்குள்ளும் இது கொண்டு வந்தது. பான்டிக்-காசுப்பியன் புல்வெளியில் இருந்த ஆதி-இந்தோ-ஐரோப்பியத் தாயகத்திடமிருந்து இந்தோ-ஐரோப்பிய மொழிகள் மெதுவாகப் பரவியது மற்றும் ஐரோவாசியப் புல்வெளிகளிலிருந்து இந்தோ-ஐரோப்பிய புலப்பெயர்வுகள் நடைபெற்றது ஆகியவற்றின் ஒரு பகுதி இதுவாகும். பான்டிக்-காசுப்பியன் புல்வெளி என்பது தொலைதூரக் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த புல்வெளிகளின் ஒரு பெரிய பகுதியாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பொ. ஊ. மு. 5வது முதல் பொ. ஊ. மு. 4வது ஆயிரம் ஆண்டுகளுக்கு இடையில் வெளியே பரவத் தொடங்கின. இந்தோ-ஐரோப்பிய புலப்பெயர்வுகளானவை தோராயமாக பொ. ஊ. மு. 2000ஆம் ஆண்டில் தொடங்கின.[1][8]
இந்த இந்தோ-ஆரிய மொழி பேசிய மக்கள் ஒரே பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் மற்றும் மொழியால் ஒன்றுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் ஆர்யா (பொருள்: "உயர் குடி") என்று குறிப்பிடப்பட்டனர். புரவலர்-பெறுநர் அமைப்புகளால் இந்தப் பண்பாடு மற்றும் மொழியின் மெதுவான பரவலானது நடைபெற்றது. இந்தப் பண்பாட்டுக்குள் பிற குழுக்கள் உள்ளிழுக்கப்படுவதற்கும், இணைவதற்கும் இது அனுமதியளித்தது. இப்பண்பாடு தொடர்பு கொண்டிருந்த பிற பண்பாடுகள் மீது இது கொண்டிருந்த வலிமையான தாக்கத்திற்கு இது விளக்கமாக அமைகிறது.