நுழைவு இசைவு
From Wikipedia, the free encyclopedia
விசா ( இலத்தீன் மொழியின் சார்ட்டா விசாவிலிருந்து, பொருள்: "பார்க்கப்பட்ட தாள்")[1] என்று பரவலாக அறியப்படும் நுழைவிசைவு அல்லது நுழைவாணை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒருவர் செல்வதையும் அல்லது அங்கிருந்து வெளியேறுவதையும் அனுமதிக்கும் ஆவணமாகும். இந்த அனுமதி ஒருவர் நுழைகையில் நுழைவெல்லையில் உள்ள குடியேற்ற அதிகாரியால் மேலும் கட்டுப்படுத்தப்படும்.
இந்த அனுமதி ஓர் ஆவணமாக இருக்கலாம்; ஆனால் பெரும்பாலான நேரங்களில் விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டில் (அல்லது கடவுச்சீட்டிற்கு மாற்றான ஆவணத்தில்) முத்திரையாகப் பதிக்கப்படுகிறது. சில நாடுகள் சிலருக்கு நுழைவிசைவு இன்றியே உள்ளே செல்ல அனுமதிக்கின்றன; இவை இருநாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் இருக்கும். நுழைவிசைவை வழங்கும் நாடு பொதுவாக தங்குவதற்கு பல நிபந்தனைகளை இடலாம்; நுழைவிசைவு பெற்றவர் செல்லக்கூடிய நாட்டின் பகுதிகள் (அல்லது செல்லக்கூடாத பகுதிகள்), தங்கக்கூடிய நாட்கள், நுழைவிசைவின் காலக்கெடு, ஒருமுறை அல்லது பலமுறை சென்றுவர இசைவு ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பின் செலவிற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விசா அல்லது நுழைவிசைவு குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினருக்கு ஒரு நாட்டினுள் செல்லவும் அங்கு குறிப்பிட்ட நாட்கள் தங்கவும் அனுமதிக்கிறது. நுழைவதற்கான காலக்கெடு, எவ்வளவு நாட்கள் தங்கலாம் மற்றும் அங்கு வேலை செய்ய அனுமதி அல்லது தடை ஆகியவற்றை இந்த ஆவணம் வரையறுக்கிறது. விசா கிடைக்கப்பெற்றது அந்நாட்டிற்குள் நுழைய உறுதி வழங்குவதில்லை; எந்நேரமும் வழங்கப்பட்ட இசைவு இரத்து செய்யப்படலாம். வருகைக்கு முன்னதான விசா விண்ணப்பம் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளுக்கு வருகையாளரின் நிதி நிலை, வருகைக்கான காரணம், அந்நாட்டிற்கு வந்த முந்தைய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள வழி செய்கிறது. நுழைகின்ற நாளன்று நிலவுகின்ற பல்வேறு அரசியல்/சமூக/தீவிரவாத நிகழ்வுகளுக்கேற்ப நுழைவிசைவு பெற்றிருந்தாலும் நுழைவு மறுக்கப்படலாம். இவற்றைத் தவிர வருகையாளர் எல்லையில் பாதுகாப்புச் சோதனைகளிலும் உடல்நலச் சோதனைகளிலும் தேர்வுற வேண்டும்.
சில நாடுகளில், காட்டாக சோவியத் ஒன்றியத்தில், அந்நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அந்நாட்டை விட்டு வெளியேற "வெளியேற்ற விசா" தேவைப்படுகிறது.[2]