லூக்கா நற்செய்தி
புதிய ஏற்பாடு நூல் / From Wikipedia, the free encyclopedia
லூக்கா நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் மூன்றாவது நூலாகும்[1]. இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள மூன்றாவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் லூக்கா எழுதிய நற்செய்தி, Κατὰ Λουκᾶν εὐαγγέλιον(Kata Loukan Euangelion = The Gospel according to Luke), என்பதாகும்.
மற்ற நற்செய்தி நூல்களான மத்தேயு நற்செய்தி,மாற்கு நற்செய்தி என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து ஒத்தமை நற்செய்தி நூல்கள் (Synoptic Gospels) [2] என்று அழைக்கப்படுவதும் உண்டு.
லூக்கா நற்செய்தி இயேசுவைப் பற்றித் தகவல் தருகின்ற நான்கு நற்செய்திகளிலும் அழகும் சிறப்பும் பொருந்தியது என அறிஞர் கூறுவர். ஏன், உலக இலக்கியத்திலேயே லூக்கா நற்செய்தி ஒரு சிறப்பிடம் பெறுகிறது. இந்நூலின் ஆசிரியர் பிற இன-கிறிஸ்தவர் என்றும், அவர் யூத சமய மரபுகள் பற்றி நன்கு புலமை பெற்றிருந்தார் எனவும் தெரிகிறது. இயேசுவை யூத சமயத்தில் வேரூன்றியவராக லூக்கா காட்டுகின்றார். அதே சமயத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையானது எருசலேமிலிருந்து, மத்திய தரைக் கடல் பகுதிகளைத் தாண்டிஉரோமை நகர் வரை பரவியதையும் அவர் உயிரோட்டமான விதத்தில் விவரிக்கின்றார்.
லூக்கா தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு இந்நூலைப் படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்கள் இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்று்ப் பின்னணியோடும் யாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக் 1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயச் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.