யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு
From Wikipedia, the free encyclopedia
1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு (Burning of Jaffna Public Library) என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் நடந்தது.[1][2][3] 1981 மே 31 இரவு ஆரம்பமான இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.[1] இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.[4]. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.[5][6] இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.[7] நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.
யாழ் பொது நூலக எரிப்பு | |
---|---|
![]() யாழ் பொது நூலகம் சூன் 1, 1981 எரியூட்டப்பட்ட பின்னரான தோற்றம் | |
இடம் | யாழ்ப்பாணம், இலங்கை |
நாள் | மே 31 - சூன் 2, 1981 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | முக்கியமாக இலங்கைத் தமிழர் |
தாக்குதல் வகை | எரிப்பு, சூடு |
ஆயுதம் | நெருப்பு, துப்பாக்கிகள் |
இறப்பு(கள்) | 7 |
காயமடைந்தோர் | தெரியவில்லை |
தாக்கியோர் | காவல்துறை, இராணுவம் மற்றும் குண்டர்கள் |