பெரிப்ளசு காட்டும் தமிழகம்
From Wikipedia, the free encyclopedia
பெரிப்ளசு என்பது ஒரு கையேட்டு நூல். இந்த வழித்துணைவன் நூலை எழுதிவைத்தவர் ஒரு கிரேக்க மாலுமி. இவரது பெயர் தெரியாததால் இவரையும் அவரது நூலின் பெயரால் பெரிப்ளசு என்றனர். பெரிப்ளசு நூல்கள் பல இருந்தாலும் அவற்றில் செங்கடல் செலவு எனப்படும் எரித்திரியக்கடல் கையேட்டு நூலே (Periplus of the Erythraean Sea) தமிழகத்தை பற்றிய குறிப்புகளைத் தருகிறது. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு இடையே உள்ள காலகட்டங்களில் எழுதப்பட்டிருக்கலாம். இவர் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் தென்மேற்குப் பருவக்காற்றை பயன்படுத்தி வரும் பாய்மரக் கப்பலில் கி.பி. முதல் நூற்றாண்டின் போது இந்தியாவுக்கு வந்தார் என கருதப்படுகிறது.[1] தான் வந்த வழி, கண்ட இடங்கள், அந்த இடங்களுக்கு இடையேயுள்ள தொலைவு, அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களின் தொழில், பழக்க-வழக்கங்கள், ஊரில் நடந்த வாணிகம், ஊரை ஆண்ட அரசர்கள் போன்றவற்றைத் தன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
அவற்றில் அக்கால இந்தியாவின் மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள், கங்கையாற்றுச் சமவெளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. [2][3] அவை இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. [4]