பாளி
From Wikipedia, the free encyclopedia
பாளி (Pali) எனப்படுவது ஒரு மத்திய இந்தோ-ஆரிய அல்லது பிராகிருத மொழியாகும். பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் கொண்ட மொழி என்ற சிறப்பையும் பெருமையையும் கொண்டது. தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது.
பாளி | |
---|---|
Pāḷi | |
உச்சரிப்பு | [paːli] |
நாடு(கள்) | இந்தியத் துணைக்கண்டம் |
ஊழி | கி.மு. 5வது-1ஆம் நூற்றாண்டு[1] |
பிராமி மற்றும் பிராமிய குடும்பம் மற்றும் தேவநாகரி ஒலிபெயர்ப்பு | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | pi |
ISO 639-2 | pli |
ISO 639-3 | pli |
பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபையைச் (Pali Text Society) சேர்ந்த தொமஸ் வில்லியம் றீஸ் டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது.
சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர்.
பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.