பாடி (சென்னை)
From Wikipedia, the free encyclopedia
பாடி இந்திய மாநகரம் சென்னையின் சுற்றுப்பகுதிகளில் ஒன்றாகும். திருவாய்ப்பாடி என்று பெயர் பெற்ற இவ்வூர் இன்று பாடி என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் கோட்டையிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னைக்கும் திருவள்ளூருக்கும் இடையே செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பாடி என வழங்கும் இவ்வூர், அம்பத்தூர் காவல் உதவிக் கண்காணிப்பாளரின் கீழ்வரும் கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதாகும். பாடிக்கெனத் தனி அஞ்சலகம் உண்டு. இதன் அஞ்சலக எண்: 600 050. அருகில் கொரட்டூர் தொடர்வண்டி நிலையம் உள்ளது. அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட இவ்வூர், அம்பத்தூர் நகராட்சியுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது; எனினும், இன்றும் பல அரசுத் துறை செயல்பாடுகள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்தே நடைபெறுகிறது. தமிழகத் தேர்தல் தொகுதிப் பிரிவின்படி இவ்வூர் திருவள்ளூர் மாவட்டத்தின் முதல் தொகுதியாக உள்ள அம்பத்தூர் தொகுதியில் அடங்கியுள்ளது.