நிலநடுக்க அளவீடு
நிலநடுக்கத்தை அளக்கும் அளவீடு / From Wikipedia, the free encyclopedia
"நில நடுக்க "அதிர்வுகளின் வலுவை பலவகையான அளவீடுகளால் அறிகிறார்கள். அவற்றுள் "ரிக்டர் அளவீடு" (Richter Scale) என்ற மடிமை (லாகரிதமிக்) அளவீட்டால் அளக்கப்படுவது பரவலாக அறியப்படும் ஒரு அளவீடு. ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் நூற்றுக்கணக்கில் நில அதிர்வுகள் பல்வேறு வலுவுடன் ஏற்படுவதாக நிலநடுக்க அளவீடு மூலம் அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் மிகச் சிறிய அதிர்வுகளாக இருப்பதால் நம்மால் அறிய முடிவதில்லை. எனவே நில உருண்டையின் மேல் ஓடானது (டெக்டானிக் தகடுகள்) தொடர்ந்து அதிர்ந்து கொண்டும் நகர்ந்து கொண்டும் இருக்கும் .
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நில அதிர்வுகளை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிலநடுக்கவியல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்படும் போது பல்வேறு நிலையங்களில் பதிவான அளவுகளைக் கொண்டு அந்த நிலநடுக்கத்தின் (பூகம்பத்தின்) நிலநடுக்க மையம் (epicenter.) எங்கு உள்ளது என்பதையும், நிலநடுக்கத்தின் வலு அளவையும் கணிப்பார்கள். பூமிக்குள் எந்த இடத்தில் பாறைப் படிமங்களின் உரசல் ஏற்பட்டதால் பூகம்பம் உண்டானதோ அது குவியம் (Focus) எனப்படும். அந்த இடத்திற்கு நேராக மேலே உள்ள பூமியின் மேற்பரப்பு புவி அதிர்ச்சி வெளிமையம் என்று அழைக்கப்படும்.
ஒரு நிலநடுக்கத்தின் குவியம் தரையிலிருந்து 70 கி.மீ. ஆழத்திற்குள் இருந்தால் அதனை ஆழமற்ற குவியம் (Shallow focus) என்பார்கள். இதனால் பூமியின் பரப்பில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். 70 கி.மீ.க்கு மேல் 700 கி.மீ ஆழத்திற்குள் பூகம்பம் உருவானால் ஆழமான குவியம் (Deep focus) என்று கருதப்படும்.