சூழல் மண்டலம்
உயிரினங்களின் சமூகம் அவற்றின் சுற்றுச்சூழலின் உயிரற்ற கூறுகளுடன் இணைந்து, ஒரு அமைப்பாக செயல / From Wikipedia, the free encyclopedia
சூழல் மண்டலம் (ecosystem, இலங்கை வழக்கு: சூழற்றொகுதி) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களையும் இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள இனங்களும், உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும்.
1930 ஆம் ஆண்டில் ரோய் கிளஃபாம் (Roy Clapham) என்பவர், சூழலின் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக சூழல் மண்டலம் என்பதற்குச் சரியான ecosystem என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் ஆர்தர் டான்ஸ்லே (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் சூழலியலாளர், இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் சூழலுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் {interactive system} குறிக்கப் பயன்படுத்தினார்.
உயிரினங்கள் அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே சூழல் மண்டலம் என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு மனிதச் சூழ்நிலைமண்டலமாக விளக்க முடியும்.
Thanks for coming