சுவாமி நாராயண்
சுவாமிநாராயண் சம்பிரதாயத்தின் நிறுவனர், இந்துக் கடவுள் / From Wikipedia, the free encyclopedia
சுவாமிநாராயண் (3 ஏப்ரல் 1781 - 1 சூன் 1830) என்பவர், இந்து சமயத்தில் அண்மைக் காலத்தில் உருவான பிரிவுகளில் ஒன்றான சுவாமிநாராயண் இந்து சமயப் பிரிவின் நிறுவனர் ஆவார். இவரை சகசநாத் சுவாமி என்ற பெயரிலும் அழைப்பர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சப்பையா என்னும் ஊரில் 1781 ஆம் ஆண்டில் பிறந்த இவரது இயற்பெயர் கண்சியாம் பாண்டே. 1792ல், இவரது 11 ஆவது வயதில் இந்தியாவின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய யாத்திரை ஒன்றை ஆரம்பித்தார். ஏழு ஆண்டுகள் எடுத்த இந்த யாத்திரையின் போது இவர் நீலகண்டர் என்னும் பெயரைப் பெற்றார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/d/d5/Lord_Swaminarayan_writing_the_Shikshapatri.jpg)
மேற்சொன்ன யாத்திரையின்போது பல்வேறு சமுதாய நலனுக்கான செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டார். இந்தப் பயணம் முடிந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளின் பின்னர், 1799ம் ஆண்டளவில் குசராத் மாநிலத்தில் குடியேறினார். 1800ல் இவரது குருவான சுவாமி இராமானந்தர் என்பவரால் உத்தவ் சம்பிரதாயம் என்னும் அமைப்பினுள் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இங்கே அவருக்கு சகசநாத் சுவாமி என்னும் பெயர் வழங்கப்பட்டது. இவரது குரு இறக்குமுன், உத்தவ் சம்பிரதாயத்தின் தலைமைப் பொறுப்பை சகசநாத் சுவாமிக்கு அளித்தார். சகசநாத் சுவாமி கூட்டமொன்றைக் கூட்டி சுவாமிநாராயண் மந்திரத்தைக் கற்பித்தார். இதிலிருந்து இவர் சுவாமிநாராயண் என்னும் பெயர் பெற்றார். உத்தவ் சம்பிரதாயமும் சுவாமிநாராயண் சம்பிரதாயம் என்ற பெயரைப் பெற்றது