சுமேரியா
சுமேரியர் சாதனை சுமேரியர் பங்களிப்பு / From Wikipedia, the free encyclopedia
சுமேரியா தெற்கு மெசொப்பொத்தேமியாவில் (இன்றைய தென் ஈராக்) அமைந்திருந்த ஒரு பழைய நாகரிகமாகும். இது கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3வது ஆயிரவாண்டில் பாபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது.
சுமேரியா | |
---|---|
புவியியல் பகுதி | தற்கால ஈராக் |
காலப்பகுதி | புதிய கற்காலம், பிந்தைய செப்புக் காலம் |
காலம் | கிமு 4500 - 1900 |
சுமேரியா உலகில் தோன்றிய நாகரிகங்களில் அதற்கு வேண்டிய சகல கூறுகளையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படுகிறது. "சுமேரியர்" என்ற சொல் சுமேரிய மொழி பேசியவர்களை குறிக்கிறது. யூப்பிரட்டீஸ், டைகிரிசு என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே மெசொப்பொத்தேமியா என அழைக்கப்படுகிறது.
இங்கு தோன்றிய நாகரிகம்தான் சுமேரிய நாகரிகம் அல்லது மெசொப்பொத்தேமிய நாகரிகம். செப்புக் காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் தெற்கு மெசொப்பொத்தேமியா, நவீன ஈராக்கில் ஒரு பண்டைய வரலாற்று பகுதியில் சுமேரியா இருந்தது. இது "நாகரீக அரசர்களின் நிலம்" அல்லது "சொந்த நிலம்" என்றும் அழைக்கப்பட்டது.[1] சுமேரியர்கள், இந்த நாகரீகம், வரலாற்றில் ஒருமித்த மூலமாகவும் முதல் மனித நாகரீகமாகவும் இருந்தது. இங்கு வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின. கி.மு 4000 முதல் கி.மு. 3000 வரை இந்த நாகரிகம் எழுச்சியுடன் காணப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.[2]
இந்த இரண்டு ஆறுகளையும் ஆண்டு முழுவதும் நீர்பாசனத்திற்காக பயன்படுத்தினர். வடக்கில் உழவுத்தொழிலில் தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவே தெற்கு மெசபடோமியாவுக்கு வந்து சுமேரிய நாகரிகத்தை தோற்றுவித்தது. முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களைச் சாரும்.[3][4][5][6] சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்து, வணிகப் பத்திரங்களை அமைத்தனர். மேலும்,செம்மைப்படுத்தப்பட்ட எழுத்து முறையையும், நூல் நிலையங்களையும் உருவாக்கினர். காலத்தை 60 நொடிகளாகப் பிரித்ததும் சுமேரியர்களே.[7] சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட இந்நாடு யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றைய ஈராக் ஆகும்.