சீமைக்காரை
கட்டிடப் பொருள் / From Wikipedia, the free encyclopedia
சீமைக்காரை (cement, சிமெந்து) என்பது, முக்கியமான ஒரு கட்டிடப் பொருள் ஆகும். இது ஒரு சிறந்த இணைபொருள் (binder). தூள் வடிவில் உள்ள இது நீருடன் கலக்கும்போது, இறுகிக் கடினமாவதுடன், ஏனைய பொருட்களையும் இணைக்கும் தன்மையைப் பெறுகிறது. பழங்காலத்திலேயே உரோமர் எரிமலைச் சாம்பல், செங்கல் துண்டுகள், சுடப்பட்ட சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒருவகைச் சீமைக்காரையைச் செய்து பயன்படுத்தினர்.
தற்காலத்தில் சீமைக்காரையின் மிக முக்கியமான பயன்பாடு, பைஞ்சுதை மற்றும் சீமைக்காரைச் சாந்து தயாரிப்பு ஆகும். இயற்கையாகக் கிடைக்கின்ற அல்லது செயற்கையாகத் தயாரிக்கப்படும் சேர்பொருட்களைச் சீமைக்காரையுடன் கலந்து செய்யப்படும் இப்பொருட்கள் பொதுவான சூழல் நிலைமைகளில் நீடித்து உழைக்கக்கூடிய கட்டடப்பொருளாகும். சீமைக்காரை நீரியற் சீமைக்காரை (Hydraulic cement), நீரியலில் சீமைக்காரை (non-hydraulic cement) என இருவகைப்படும்.