கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு
From Wikipedia, the free encyclopedia
கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு (Colebrooke-Cameron Commission) என்பது பிரித்தானிய இலங்கையின் நிருவாகத்தை மதிப்பிடுவதற்கும், அந்நாட்டின் நிருவாகம், நிதி, பொருளாதாரம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் மெற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும், 1829 ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு அரசு ஆணைக்குழு ஆகும். இவ்வாணைக்குழுவில் டபிள்யூ. எம். ஜி. கோல்புரூக், மற்றும் சி. எச். கேமரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை கோல்புறூக்-கேமரன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்பட்டன.
இலங்கையில் 1833 முதல் 1910 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது அரசியலமைப்பும் இதுவே. இலங்கையில் மன்னராட்சி முறையின் கீழ் அல்லது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் திட்டமிடப்பட்ட அரசியல் நிர்வாகமுறை எதுவும் காணப்படவில்லை. இலங்கையின் அரசியலானது மன்னராட்சிக் காலத்தில் மரபுவழி சார்ந்த நிர்வாக முறைகளையே கொண்டிருந்தது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் இலங்கையில் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள எத்தனித்தார்களே தவிர, அவர்கள் அரசியலில் ஒரு திட்டமிட்ட ஏற்பாட்டினையும் வழங்கவில்லை. இந்த நிலையில் ஓர் அரசியல் அமைப்பின் கீழ் இலங்கை ஆட்சிமுறையை வழித்திய நாடாக பிரித்தானியாவைக் குறிப்பிடலாம்.