குடியரசுத் தலைவர் ஆட்சி
From Wikipedia, the free encyclopedia
குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு இந்திய அரசு மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது. மாநில சட்டப்பேரவையில் எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.
ஒரு மாநில ஆளுநர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் தாமே முடிவெடுத்தும், அல்லது ஆளும் கட்சியின் பரிந்துரைப்படியோ அல்லது மத்திய அரசின் பரிந்துரைப்படியோ சட்டப்பேரவையைக் கலைக்கலாம். அப்போது சட்டப்பேரவை ஆறு மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும்.
மாநில ஆட்சி வழக்கமாக ஒரு முதலமைச்சரின்கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர். ஆயினும் நிர்வாக அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கு மாற்றப்பட்டு ஆட்சி நடத்துகிறார். அவர் தமது உதவிக்கு ஆலோசகர்களை, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், நியமித்துக் கொள்வார். பொதுவாக மத்திய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும்.