கிறித்துமசு தாத்தா
கிறித்துமசுக்கு முந்தைய இரவில் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குபவராக கூறப்படும் நாட்டார் பாத / From Wikipedia, the free encyclopedia
கிறித்துமசு தாத்தா அல்லது நத்தார் தாத்தா (Santa Claus, சாண்டா குலோஸ், அல்லது புனித நிக்கலசு) என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். மேற்குலகப் பண்பாட்டில் கிறித்துமசு நாளுக்கு முதல் நாள் டிசம்பர் 24 இரவில் இவர் குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார். [1] சண்ட குலோஸ் என்ற சொல் டச்சு மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும்.
நவீன சாண்டா குலோஸ் மரபுகளிலிருந்து வெளிவந்து வரலாற்றில் நான்காம் நூற்றாண்டில், கிரேக்கத்தில் வசித்த ஆயர், புனித நிக்கலசு என்பவரைச் சுற்றியே வருகிறது. இவரே ஆங்கிலேய நாட்டுப்புறக் கலைப் பின்னணி கொண்ட கிறித்துமசு தாத்தாவாகவும், டச்சு நாட்டின் நாட்டுப்புறக் கலை உருவமான சின்டர்கிளாசாகவும் (இவரும் புனித நிக்கலசை அடிப்படையாகக் கொண்டவரே) சித்தரிக்கப்படுகிறார். புனித நிக்கலசு இரகசியமாக குழந்தைகளுக்குப் பரிசு தரும் இயல்புடையவராக இருந்துள்ளார். சிலர் சாண்டா குலோஸ் செருமானியக் கடவுள் ஓடினின் சாயலைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். ஓடின் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் வேட்டையாடும் கெட்ட ஆன்மாக்களை வான் வழியாக ஊர்வலமாக அழைத்து வரும் செருமானிய விழாவின் நாயகனாவார்.
ஆனால், சாண்டா குலோஸ் பொதுவாக, மகிழ்ச்சிகரமான, வெண்தாடி உடையவராக, சிவப்பு நிற மேலங்கி மற்றும் வெண்மை நிற விலங்கின் உரோமத்தினாலான கழுத்துப்பட்டி மற்றும் மணி கோர்ப்பதற்கான இடம், சில நேரம் கண்ணாடி அணிந்தும், சில நேரம் கண்ணாடி அணியாமல், சிவப்பு நிறத்தொப்பி மற்றும் கருப்பு நிற இடையணி மற்றும் காலணிகளுடன் பை நிறைய குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களுடன் வருபவராக சித்தரிக்கப்படுகிறார். மேலே வர்ணிக்கப்பட்ட தோற்றமானது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் 1823 ஆம் ஆண்டில், அரசியல் நையாண்டியுடன் கேலிச்சித்திரம் வரையும் தாமஸ் நாஸ்ட் என்பவரால் எழுதப்பட்ட புனித நிக்கோலசின் வருகை என்ற பாடலின் குறிப்பிடத்தக்க தாக்கத்தால் பிரபலமடைந்தது. [2][3][4] இந்தத் தோற்றமானது வானொலி, தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக நிலைநிறுத்தவும், வலுவூட்டவும் பட்டது.
சாண்டா குலோஸ் உலகம் முழுவதும் உளள குழந்தைகளின் பட்டியலைக் கொண்டுள்ளதாகவும், அவர்களை, அவர்களின் நடத்தையின் அடிப்படையில் இனிமையான குழந்தை அல்லது குறும்புக்காரக் குழந்தை என்று வகைப்படுத்தி வைத்திருப்பதாகவும், கிறித்துமசு நாளுக்கு முந்தைய நாள் இரவில், நல்ல நடத்தையுடைய குழந்தைகளுக்கு பொம்மைகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பரிசுகளையும், தீய நடத்தையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நிலக்கரியையும் வழங்குவார் எனவும் கூறப்படுகிறது. அவர் தன்னுடன் வசிக்கும் அதிசய சக்தி கொண்ட உதவியாளர்களுடன், தனது பட்டறையில் உருவாக்கிய பொம்மைகளுடன் தனது ரெயின்டீர் பனிச்சறுக்கு வண்டியில் வட துருவத்திலிருந்து வருவதாக நம்பப்படுகிறது. [5][6].