கே. ராம்நாத் இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கன்னியின் காதலி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலிதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகமான பன்னிரண்டாவது இரவு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது இத்திரைப்படம். என். டி. சுந்தரத்தின் வசனத்திலும் வேதாந்தம் ராகவய்யாவின் நடனப்பயிற்சியிலும் உருவான இத்திரைப்படம் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எல். வசந்தகுமாரி பின்னணி பாடினார்.[1]
கன்னியின் காதலி | |
---|---|
இயக்கம் | கே. ராம்நாத் |
தயாரிப்பு | கே. ராம்நாத் சேகர் |
கதை | கதை ஷேக்ஸ்பியர் |
இசை | சி. ஆர். சுப்புராமன் எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | எஸ். ஏ. நடராஜன் கே. ஆர். ராம்சிங் கே. சாரங்கபாணி முஸ்தபா அஞ்சலிதேவி மாதுரி தேவி எம். எஸ். எஸ். பாக்கியம் லலிதா பத்மினி |
வெளியீடு | ஆகத்து 6, 1949 |
நீளம் | 15342 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஒரே சாயலுள்ள அண்ணன் ஆதித்தனும் தங்கை சந்திரிகாவும் விதிவசத்தால் பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். (அண்ணனாகவும் தங்கையாகவும் மாதுரி தேவி நடிக்கிறார்). தனது பெண்மையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஆண்வேடம் தாங்கி கலைமணி என்ற பெயர் பூண்ட சந்திரிகா, வசந்தபுரி மன்னனின் (எஸ்.ஏ.நடராஜன்) ஆஸ்தான கவியாக அமர்ந்து அவனது காதலியான மேகலையிடம் (அஞ்சலிதேவி) காதல் தூது செல்கிறாள். கலைமணியை உண்மை வாலிபன் என எண்ணிய மேகலை தன் உள்ளத்தைப் பறி கொடுக்கிறாள். சமயத்தில் ஆதித்தனும் அங்கு வருகிறான். உடன்பிறந்தவர்களின் தோற்றப் பொருத்தத்தால் தோன்றிய குழப்பங்கள் தீர்ந்து மேகலையை ஆதித்தனும், வசந்த குமாரனைச் சந்திரிகாவும் மணக்கின்றனர். கதையும் சுபமாக முடிகிறது.
எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் சி. ஆர். சுப்பராமன் திரைப்படத்திற்கு இசையமைத்தனர். பாடல்களை புதுக்கம்பன் பூமி பாலகதாஸ், கண்ணதாசன் மற்றும் கே. டி. சந்தானம் எழுதினர்.[2] இத்திரைப்படத்தில்தான் கண்ணதாசன் அவர்கள் திரையுலகில் அறிமுகமாகி "கலங்காதிரு மனமே" பாடல் வரிகளை எழுதினார்.[3] "கலங்காதிரு மனமே" பாடல் முதலில் எழுதி பிறகு இசையமைக்கப்பட்டது.
எண். | பாடல்கள் | பாடகர்கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "கலங்காதிரு மனமே" | கே. வி. ஜானகி | கண்ணதாசன் | 02:37 |
2 | "புவி ராஜா" | எம். எல். வசந்தகுமாரி திருச்சி லோகநாதன் | 02:42 | |
3 | "காரணம் தெரியாமல்" | எம். எல். வசந்தகுமாரி | 02:28 | |
4 | "கண்டேன் ஐயா" | கே. வி. ஜானகி | 02:19 | |
5 | "சித்திரை பறவையம்மா" | கே. வி. ஜானகி | 03:07 | |
"காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே" என்னும் பாடலுக்கு முதலில் கண்ணதாசன் எழுதிய வரி "காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே". அப்பொழுது சி. ஆர். சுப்பராமன் அவரிடம் உதவியாளராக பணியாற்றி எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் "களி.. கூத்து" போன்ற சொற்கள் கேட்பதற்கு ஓசை நயம் இல்லை என்று கூறி வரிகளை மாற்ற சொல்லியுள்ளார். அப்பொழுது அங்கே வந்த உடுமலை நாராயணகவி அவர்கள் பாடலை "காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே" என்று மாற்றிவிட்டு கண்ணதாசனிடம் திரையுலகில் உள்ளவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை அதனால் அவர்களுக்கு பிடித்தபடி பாடல் எழுத வேண்டும் என்று கூறியுள்ளார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.