கணுக்காலி
From Wikipedia, the free encyclopedia
கணுக்காலிகள் ((ஒலிப்புⓘ) (Arthropod) என்பவை விலங்குகளின் பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும், வண்டுகளும், தேளினங்களும், எட்டுக்கால் பூச்சி, சிலந்திகளும், நண்டுகளும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட விலங்குகளில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் ஆர்த்ரோபோடா (Arthropoda) என்பர். இது கிரேக்க மொழியில் உள்ள ἄρθρον ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, கணு) என்னும் சொல்லும் ποδός (போடொஸ் = கால்) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான புறவன்கூடு உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. பிப்ரவரி 29, 2016 அன்று, 2013ல் தெற்குச் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 52 கோடி (520 மில்லியன்) ஆண்டுகள் பழமையான கணுக்காலியின் தொல்படிம மேட்டின் கூடுதல் படிமம் மற்றும் கள ஆய்வில் அதன் வயிற்றின் கீழ்ப்பகுதியில் செல்லும் கயிறு போன்ற ஒன்று அதன் கீழ்நரம்பு வடம் எனப் புரசீடிங்சு ஓப் நேச்சரல் அகாடமி ஆப் சயன்சசு இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். [1]
கணுக்காலி புதைப்படிவ காலம்:540–0 Ma கேம்பிரியன் – தற்காலம் வரை | |
---|---|
கணுக்காலிகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
துணைத்திணை: | யூமெட்டாசோவா |
பெருந்தொகுதி: | எக்டைசோசூவா |
தொகுதி: | கணுக்காலி லேட்ரெல்லே, 1829 |
துணைத்தொகுதி மற்றும் வகுப்பு | |
|
கணுக்காலிகளில் பிளாங்க்டன் (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ. அளவில் இருந்து, 20 கிலோ கிராம் எடையுடன் 4 மீட்டர் (12-13 அடிகள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரிய நிப்பானிய எட்டுக்கால் நண்டு வரை மிகப்பல வகைகள் உள்ளன.
கணுக்காலிகளை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய மூன்று இயல்புகள்:
- கைட்டினாலான புறவன்கூடு
- துண்டுகளாலான உடல்
- மூட்டுள்ள தூக்கங்கள் (மூட்டுள்ள கால்கள்)
இவை பார்வைக்காகக் கூட்டுக்கண்களையும் ஒசிலி எனும் பார்வைப் புலனங்கத்தையும் பயன்படுத்துகின்றன. பூச்சிகளில் கூட்டுக்கண்ணே பிரதானமான பார்வைப் புலனங்கமென்றாலும், சிலந்திகளில் ஒசிலிகளே பிரதான பார்வைப் புலனங்கங்களாகும். பூச்சிகளின் ஒசிலிக்களால் ஒளி வரும் திசையை மாத்திரமே கணிக்க முடியும். எனினும் சிலந்திகளின் ஒசிலிக்களால் முழு உருவத்தையும் கணித்துக்கொள்ள முடியும். கேம்பிரியன் காலப்பகுதியிலிருந்து கணுக்காலிகள் பூமியில் உள்ளன. அவற்றின் உடலகக் கட்டமைப்பின் சிறப்புத் தன்மையால், விலங்குகளில் அதிகளவான இனங்களும், அதிகளவான தனியன்களும் கணுக்காலிகளாக உள்ளன. எனவே இவையே விலங்குக் கூட்டங்களுள் அதிக வெற்றியுடைய கூட்டமாக உள்ளன. எனினும் உலகிலுள்ள உயிரினங்களுள் பாக்டீரியாக்களே அதிக இனங்களையும், அதிக தனியன்களையும் கொண்ட கூட்டமாகும்.
கணுக்காலிகள் மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களைக் காட்டுகின்றன. நாம் உண்ணும் உணவில் முக்கியப் பங்கை வகிக்கும் இறால், நண்டு என்பன கணுக்காலிகளே. ஒவ்வொரு வருடமும் பயிர்களின் அறுவடைக்கு முன்னமும் பின்னரும் பயிரையும் விளைச்சலையும் அழித்துப் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் பீடைகளில் அதிகமானவை கணுக்காலிகளே. தாவரங்களின் தேனை உறிஞ்சி அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் கணுக்காலிகளாகும். எறும்புகளும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவையே ஆகும். எனவே உயிரினப் பல்வகைமையில் கணுக்காலிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன.