மத்திய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் ஆட்சி செய்த வம்சம் From Wikipedia, the free encyclopedia
கச்சபகத வம்சம் (Kachchhapaghata dynasty) என்பது 10 -12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்த ஒரு இந்திய வம்சமாகும்.[2] மத்திய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் (இன்றைய மத்தியப் பிரதேசம் ) இவர்கள் ஆட்சி செய்தனர். இவ்வம்சத்தின் மன்னர் மகிபாலன் 1093இல் சாஸ்பாகு கோயில் கட்டினார்.
சமசுகிருத வார்த்தையான கச்சப-கதா (कच्छपघात) என்பதன் அர்த்தம் "ஆமைக் கொலையாளி" என்பதாகும்.[3] கச்சபகதர்கள் முதலில் பிரதிகாரர்கள் மற்றும் சந்தேலர்களின் அடிமைகளாக இருந்தனர். [4] சந்தேல மன்னன் வித்யாதரன் இறந்த பிறகு, மீண்டும் மீண்டும் முஸ்லிம் ( கசனவித்துகள் ) படையெடுப்புகளால் சந்தேல இராச்சியம் பலவீனமடைந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, கச்சபகதர்கள் சந்தேலர்களிடம் தங்கள் விசுவாசத்தைக் கைவிட்டனர். [5] பின்னர், இவர்கள் 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சக்தி வாய்ந்தவர்களாக மாறினர். [4]
சாஸ்பாகு கோவில் கல்வெட்டு, இலட்சுமணன் என்பவரை வம்சத்தின் முதல் முக்கிய உறுப்பினர் என்று கூறுகிறது. இந்தக் கல்வெட்டும், பொ.ச.977 தேதியிட்ட சிஹோனியா கல்வெட்டும் அவரது வாரிசான வஜ்ரதாமன் கன்னோசி பிரதிகார ஆட்சியாளரான காதிநகர அரசனிடமிருந்து கோபாத்ரியை (குவாலியர்) கைப்பற்றியதாகக் கூறுகிறது. [6] 1093-94 மற்றும் 1104 தேதியிட்ட குவாலியர் கல்வெட்டுகளில் வம்சத்தின் திலகமாக விவரிக்கப்படும் வஜ்ரதாமன், வம்சத்தின் முதல் சக்திவாய்ந்த ஆட்சியாளராக இருக்கலாம். இவர் சந்தேல மன்னர்களான தங்கன் மற்றும் வித்யாதரன் ஆகியோருக்கு நிலப்பிரபுவாக பணியாற்றினார். [7]
குவாலியர் (கோபாத்ரிகிரி), துப்குந்தா (சந்தோபா) மற்றும் நார்வார் (நளபுரம்) ஆகிய இடங்களிலிருந்து ஆட்சி செய்த வம்சம் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டது. [8] நளபுரத்தின் கச்சபகத ஆட்சியாளரான வீரசிம்மன் (வீரசிம்மராமன் அல்லது வீரசிம்மதேவன்) 1120-21 தேதியிட்ட செப்புத் தகட்டில் மானியத்தை வழங்கியதாகத் தெரிவிக்கிறார். இந்த பதிவு இவர் மகாராஜாதிராஜா என்ற உயர் அந்தஸ்துள்ள அரச பட்டத்தைப் பயன்படுத்தியதை விவரிக்கிறது. இவர் வெளியிட்ட தங்க நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [9]
நாட்டுப்புற பாரம்பரியத்தின் படி, வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் தேஜஸ்கரனன் (துல்ஹா ராய் அல்லது தோலா ராய்), காதல் கதையான தோலா மாருவின் நாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார். குவாலியர் கோட்டையின் பொறுப்பாளராக பரமல்-தேவனை (அல்லது பரமார்த்தி-தேவன்) விட்டுவிட்டு, அண்டை நாட்டு ஆட்சியாளரின் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்காக 1128-இல் குவாலியரை விட்டுச் சென்றதாக இந்தக் கணக்கு கூறுகிறது. இவர் குவாலியருக்குத் திரும்பியபோது, பரமல் கோட்டையை இவரிடம் ஒப்படைக்க மறுத்து, 103 ஆண்டுகள் குவாலியரை ஆண்ட பரிகார வம்சத்தை நிறுவினார். குவாலியரின் பரிகார ஆட்சியாளர் இராம்தேவின் 1150 தேதியிட்ட கல்வெட்டும் இலோகங்க-தேவனின் 1194 கல்வெட்டும் இவரைப் பற்றிக் கூறுகிறது.. [10] இருப்பினும், மற்ற கல்வெட்டுகள், கச்சபகதர்கள் இப்பகுதியை குறைந்தது பொ.ச. 1155 வரை ஆண்டதாகக் கூறுகின்றன. [11] கூடுதலாக, குவாலியரில் கண்டெடுக்கப்பட்ட 1192 மற்றும் 1194 கல்வெட்டுகள், கச்சபகத ஆட்சியாளர் அஜயபாலன் பிற்காலத்திலும் குவாலியரைக் கட்டுப்படுத்தினார் என்பதைக் காட்டுகின்றன. [10] எனவே, நாட்டுப்புறக் கணக்கு முற்றிலும் நம்பகமானதாக இல்லை. மேலும் பரிகார தலைவர்கள் குவாலியரை கச்சபகதர்களின் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்திருக்கலாம். [10]
வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான சுலக்சனபாலன், கோரி படையெடுப்பால் தனது இராச்சியத்தை இழந்ததாகத் தெரிகிறது. 1196 இல் குத்புத்தீன் ஐபக் குவாலியர் மீது படையெடுத்தார். மேலும் சுலக்சனபாலனிடமிருந்து வரியை வசூலித்தார் என்று தாஜுல்-மாசிர் பரிந்துரைக்கிறார். பிற்காலத்தில் படையெடுப்பாளர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். [12] தோலா மாரு போன்ற நாட்டுப்புறக் கணக்குகள், ஆம்பர் கச்வாக வம்சம், கச்சபகத வம்சத்தின் நார்வார் கிளையின் கடைசி ஆட்சியாளரான தேஜஸ்கரனிடமிருந்து தோன்றியதாகக் கூறுகின்றன. [13] இருப்பினும், கச்வாக கல்வெட்டுகள் இவர்களின் வம்சத்திற்கு வேறுபட்ட தோற்றத்தைக் கூறுகின்றன. [14]
இவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் ஆதரித்தனர். ஆனாலும் பௌத்தத்தின் மீதும்,சைனத்தின் மீதும் சகிப்புத்தன்மையுடன் இருந்துள்ளனர். கத்வாகாவில் இவர்களது ஆட்சியின் போது சாஸ்பாகு கோயில் கட்டப்பட்டது.[2]
குவாலியரின் கச்சபகத வம்சம் குறிப்பாக அவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு குறிப்பிடத்தக்கது. [15] கச்சபகதாவின் ஆட்சியாளர் மகிபாலன் குவாலியரில் உள்ள சாஸ்-பாகு கோயிலை நிறுவினார். பொ.ச.1093 , பொ.ச.1104 தேதியிட்ட குவாலியரில் அவர் வழங்கிய இரண்டு மானியங்களின் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் வெளியிட்ட பல வெள்ளி , தங்க நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [9] அஜயபாலன் (ஆட்சி 1192-1194) 1194 கல்வெட்டு மூலம் சான்றளிக்கப்பட்டபடி, குவாலியரின் கங்கோலா குளம் தூர்வாரப்பட்டது. [16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.