கதிரவ மறைப்பு
From Wikipedia, the free encyclopedia
கதிரவ மறைப்பு அல்லது சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவனுக்கும் புவிக்கும் இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். எனவே புதுநிலவு நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு நிகழ்கிறது.[1] கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி, வலய மறைப்புகளும் ஏற்படுகின்றன. இக்கதிரவ மறைப்பு அமாவாசை அன்று மட்டுமே நிகழும்.
நிலவு புவியைச் சுற்றும் வட்டணை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே கதிரவ மறைப்பு நாளைத் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை.
கதிரவ மறைப்பின்போது நிலவின் நிழல் புவியின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது. அப்போது புவி இருக்கும் நிலையைப் பொறுத்து கதிரவ மறைப்பு எந்தெந்த இடங்களில் தென்படும் என்பதைக் கணிக்க இயலும்.[2]
கதிரவனை நேரடியாகக் காண்பது கண்களுக்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும். ஆனால் முழுமையான கதிரவ மறைப்பை உச்ச நிலையை மட்டும் வெறும் கண்களால் காண இயலும். அதற்கு முன்பு அதன் உச்ச நிலை நேரத்தை முன்பே துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகும்.