இருப்புப்பாதைப் போக்குவரத்து
From Wikipedia, the free encyclopedia
தொடர்வண்டிப் போக்குவரத்து என்பது, இருப்புப்பாதைகளின் மீது ஓடுவதற்காக வடிவமைக்கப்பட்ட உந்துகள் மூலம் பயணிகளையும், சரக்குகளையும் வெவ்வேறு இடங்களுக்கு இடையே கொண்டு செல்வதைக் குறிக்கும். ஏற்பாட்டியல் சங்கிலியில் (logistics chain) தொடர்வண்டிப் போக்குவரத்து ஒரு பகுதியாகும். இது உலக வணிகத்துக்கு உதவுவதுடன், பல நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்கும் முக்கியமானதாக உள்ளது. பொதுவான இருப்புப் பாதைகள் இரண்டு தண்டவாளங்கள் ஒன்றுக்கு ஒன்று இணையாகப் பொருத்தப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும். தண்டவாளங்கள் உருக்கினால் (எஃகு) செய்யப்பட்டவை. இவை வரிசையாகக் குறிப்பிட்ட இடைவெளி விட்டு ஒன்றுக்கொன்று இணையாக அடுக்கப்பட்டுள்ள குறுக்குக் குற்றிகள் மீது பொருத்தப்பட்டிருக்கும். இம் முழு அமைப்பும் அசையாது நேராக இருப்பதற்காக இவற்றுக்குக் கீழ் சல்லிக் கற்கள் அல்லது காங்கிறீட்டுக் கொண்டு உறுதியான அடித்தளம் இடப்பட்டிருக்கும்.
இப் பாதையில் ஓடும் உந்துக்களுக்கு உருக்காலான சில்லுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை வழமையான சாலைகளில் செல்லும் வண்டிகளிலும் குறைந்த உராய்வுடன் ஓடுகின்றன. தொடர்வண்டிப் பொறிகள் வண்டிகளை இழுப்பதற்கு, தமது சில்லுகளுக்கும் தண்டவாளங்களுக்கும் இடையேயுள்ள தொடு புள்ளிகளில் இருக்கும் ஒட்டும் தன்மையிலேயே தங்கியுள்ளன. பொறிகளின் சுமையின் ஒரு பகுதி சில்லுகளினூடாகத் தண்டவாளங்களுக்குக் கடத்தப்படுவதனாலேயே இந்த ஒட்டும் தன்மை உண்டாகிறது. பொதுவான உலர் நிலைமைகளில் இது போதுமானது. ஆனால், ஈரத்தன்மை, எண்ணெய்த்தன்மை, பனிக்கட்டி, காய்ந்த இலைகள் என்பன இந்த ஒட்டுந்தன்மையைக் குறைக்கவோ இல்லாமலாக்கவோ கூடும்.
பயணிகள் வண்டிகளும் மற்றும் சரக்கு சுமைப்பெட்டிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு நீளமான தொடர்வண்டியாக அமைக்கப்படுகின்றன. தொடர் வண்டி நிலையங்களுக்கிடையே அல்லது சரக்கு பயனர் கிடங்குகளிடையேயான தொடர்வண்டி போக்குவரத்து இயக்கத்தை ஒரு இருப்புப்பாதை நிறுவனம் மேற்கொள்கிறது. தொடர்வண்டிப் பொறிகள் பொதுவாக இருப்புப்பாதை மின்மய அமைப்பிலிருந்து பெறுகின்ற மின்னாற்றலைக் கொண்டோ நீராவி அல்லது டீசல் பொறிகளில் தாமாகவே உருவாக்கும் ஆற்றலைக் கொண்டோ இயங்குகின்றன. இருப்புப்பாதைகளுடனேயே இயக்கத்திற்குத் தேவையான சமிக்ஞை கம்பித்தடங்களும் இடப்படுகின்றன. மற்ற போக்குவரத்து அமைப்புகளை விட இருப்புப் பாதை போக்குவரத்து பாதுகாப்பான நிலவழி போக்குவரத்தாக உள்ளது.[Nb 1] தொடர்வண்டிப் போக்குவரத்து மூலமாக கூடிய அளவில் பயணிகளையும் சரக்குச் சுமைகளையும் எடுத்துச் செல்ல முடியும்; மேலும் இவ்வகைப் போக்குவரத்து மிகவும் குறைந்த ஆற்றலில் நிறைந்த சுமையை நகர்த்த வல்லதாக உள்ளது. இதன் குறைகளாக நெகிழ்ச்சி இல்லாதிருத்தலும் (குறிப்பிட்ட நிலையங்களுக்கிடையே மட்டுமே பயன்படுத்த இயலும்) கட்டமைக்க சாலைப் போக்குவரத்தை விட கூடுதலான மூலதனம் தேவைப்படுவதும் குறிப்பிடப்படுகின்றன; குறைந்த போக்குவரத்துத் தேவைகளுக்கு தொடர்வண்டிப் போக்குவரத்து பொருளாதார ஆதாயம் தருவதில்லை.
மிகவும் பழமையான மனிதர் இழுத்த தொடர்வண்டியை கி.மு ஆறாம் நூற்றாண்டின் கிரேக்க ஞானி பெரியாண்டர் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. பிரித்தானியர்கள் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த பிறகு இருப்புப் பாதை போக்குவரத்து புத்துயிர் பெற்றது. தொழிற் புரட்சியின் அங்கமாக நீராவிப் பொறிகளைப் பயன்படுத்தி வணிகப் பயன்பாட்டிற்கான தொடர்வண்டிப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்க முடிந்தது. மேலும் இதன்மூலம் அனுப்பும் செலவுகளைக் குறைக்க முடிந்ததுடன் வழியில் பொருட்களை இழப்பதும் குறைந்தது. கால்வாய்கள் மூலமான போக்குவரத்திலிருந்து நிலவழியாக அனுப்ப முடிந்ததால் அனைத்து நகரங்களிலும் ஒரே விலையுடன் தேசிய சந்தைகள் உருவாகின. 19ஆம் நூற்றாண்டின் தொழிற்நுட்ப மேம்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. 1880களில் மின்சாரம்|மின்மய தொடர்வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன; அதே காலகட்டத்தில் நகரப் போக்குவரத்திற்காக அமிழ் தண்டூர்திகளும் விரைவுப் பயண அமைப்புகளும் அமைக்கப்பட்டன. மின்மயமாகாத பல நாடுகளில் அதுவரை இயக்கத்திலிருந்த நீராவி உந்துகள் 1940களிலிருந்து டீசல்-மின் உந்துகளுக்கு மாறத் தொடங்கி 2000ஆம் ஆண்டில் முழுமையாக மாற்றம் அடைந்தன. 1960களில் சப்பானில் மின்மயமாக்கப்பட்ட அதிவிரைவு தொடர்வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன; இந்தப் போக்கு பிற நாடுகளிலும் பரவியது. தண்டவாள அமைப்புகளில் வழிசெலுத்தப்படும் இதேபோன்ற மற்ற வடிவங்களான ஒற்றைத் தண்டூர்தி மற்றும் காந்தத் தூக்கல் போக்குவரத்து ஆகியன சோதிக்கப்பட்டபோதும் மிகுந்தப் பயன்பாட்டில் இல்லை.