இரட்டைக் குடியுரிமை
From Wikipedia, the free encyclopedia
இரட்டைக் குடியுரிமை (multiple citizenship) என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப குடியுரிமை பெற்றிருக்கும் நிலையைக் குறிக்கும். ஒருவர் எந்த நாட்டின் குடிமகன் என்பதை முடிவு செய்யும் பன்னாட்டு மரபு ஏதும் இல்லை. இது அந்தந்த நாடுகளின் சட்டங்களின் அடிப்படையிலேயே முடிவாகும். இச்சட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டும் முரணாகவும் ஒன்று மற்றொரு நாட்டின் சட்டத்தை மீறாமலும் கூட அமையலாம்.
சில நாடுகள் இரட்டைக் குடியுரிமையை ஏற்பதில்லை. இவை குடியுரிமை கோரும் நபர்களை அவரது மற்ற குடியுரிமைகளைத் துறக்கக் கோரலாம். அல்லது, இன்னொரு நாட்டில் புதிய குடியுரிமை பெறுபவரிடம் இருந்து தம் நாட்டுக் குடியுரிமைகளைப் பறித்துக் கொள்ளலாம். சில நாடுகள் எல்லா நாடுகளிலும் கூடுதல் குடியுரிமைகள் பெறுவதை ஏற்கின்றன. மற்ற சில நாடுகளோ, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இரட்டைக் குடியுரிமை பெறலாம் என்று கட்டுப்பாடு விதிக்கக்கூடும்.
இரட்டைக் குடியுரிமையை ஏற்கும் பல்வேறு நாடுகள் கூட, தத்தம் ஆட்சிப் பகுதிகளில் கூடுதல் குடியுரிமைகளுக்கு ஏற்பு வழங்குவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, தேர்தலில் வாக்களித்தல், தேசிய இராணுவச் சேவை ஆகியவற்றுக்கு இது பொருந்தும். இதே போல, தூதரகங்களில் பணியாற்றுதல், இராணுவம் / காவல் துறையில் பணியாற்றுதல், குறிப்பிட்ட சில அரசுப் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடவும் இரட்டைக் குடியுரிமை உள்ளோருக்கு ஏற்பு இருப்பதில்லை.