இயற்கை எரிவளி
From Wikipedia, the free encyclopedia
இயற்கை எரிவளி அல்லது இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு புதைபடிவ எரிபொருள். இதனை மண்வளி என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் கலவையாகக் கிடைக்கும் ஒரு வளி. பெரும்பான்மையாக மெத்தேன் வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான எத்தேன், புரொப்பேன், பியூட்டேன், பென்ட்டேன் ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையைப் பார்க்கவும்).
இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளியானது தூய்மையானதும் பாதுகாப்பானதும் மிகவும் பயனுள்ளதும் ஆகும். பெரும்பாலும் இது இல்லங்களில் சூடேற்றுவதற்கும், மின்னாற்றல் ஆக்குவதற்கும் பயன்படுகிறது. 2005ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக மிகுதியாகப் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு ஆற்றல்வாய்கள் பின்வருவன: எரியெண்ணெய் 37%, நிலக்கரி 24%.