இந்தியத் தேர்தல்கள்
From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசு உலகில் உள்ள மக்களாட்சி நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்டதாகும். 18 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு கணக்கின்படி 71.4 கோடி பேர் இந்தியாவில் வாக்குரிமை பெற்றிருந்தனர்.
இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேரடித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்ற விதிப்படி இத்தேர்தல்கள் அமைகின்றன. வேட்பாளர்களும் அதிக வாக்குகளைப் பெற்றவர் (plurality) வெற்றி பெறுகிறார். நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேசிய அளவில் தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இது தவிர மாநில அளவிலான தேர்தல்களை நடத்த மாநிலந்தோறும் இதன் கீழ் மாநில தேர்தல் ஆணையங்கள் செயல்படுகின்றன. 20ம் நூற்றாண்டின் இறுதிவரை வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல்கள் நடத்தப்பட்டன. தற்போது பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன.