அத்வைதம்
From Wikipedia, the free encyclopedia
அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) (IAST Advaita Vedānta; சமஸ்கிருதம்: अद्वैत वेदान्त ) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.[1]
பொ.ஊ. 788-820-ம் காலத்தே வாழ்ந்த ஆதிசங்கரர் (இவரது காலம் பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.[2] இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சங்கரரின் குருவின் பரமகுருவாகிய கௌடபாதர் எழுதிய மாண்டூக்ய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.