அணுக்கரு ஆயுதங்கள்
From Wikipedia, the free encyclopedia
அணுகுண்டு (ஒலிப்புⓘ) என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிபொருளாகும். இவ்விரு தாக்கங்களும் சிறியளவு திணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன. மிகச்சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்திருந்து அதைப் பெருவேகத்தில் வெளிப்படுத்துவதே அணுகுண்டின் தத்துவமாகும்.முதல் அணுக்கருப் பிளவுக் குண்டின் பரிசோதனையின்போது அண்ணளவாக 20,000 தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது. முதல் ஐதரசன் குண்டின் பரிசோதனையின் போது அண்ணளவாக 10 மில்லியன் தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது.
2,400 pounds (1,100 kg) திணிவுடைய ஒரு ஐதரசன் குண்டு, 1.2 மில்லியன் தொன் TNTயின் வெடிப்பின்போது வெளியிடப்படும் சக்தியிலும் அதிக சக்தியை வெளியிடக்கூடியது. ஆகவே, பாரம்பரியமான ஒரு குண்டிலுஞ் சிறிய அணுவாயுதம் வெடிப்பு, தீ மற்றும் கதிர்ப்பு ஆகியவற்றின் மூலமாக ஒரு நகரத்தையே அழிக்கக் கூடியது. அணுவாயுதங்கள் பேரழிவு ஆயுதங்களாகக் கருதப்படுவதோடு, இவற்றின் பயன்பாடும் கட்டுப்பாடுகளும் சர்வதேச உறவுகளில் பெரிய தாகத்தை ஏற்படுத்த வல்லன.
இரண்டு அணுவாயுதங்கள் மாத்திரமே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையிரண்டும் ஐக்கிய அமெரிக்காவால் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பயன்படுத்தப்பட்டன. ஆகஸ்ட் 6, 1945 அன்று, "சின்னப் பையன்" எனப் பெயரிடப்பட்ட யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு ஜப்பானிய நகரமான இரோசிமாவில் வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், ஆகஸ்ட் 9 அன்று "குண்டு மனிதன்" எனப் பெயரிடப்பட்ட புளூட்டோனியம் கருப்பிளவு அணுகுண்டு இன்னொரு ஜப்பானிய நகரான நாகசாகியில் வீசப்பட்டது. இவ்விரு குண்டுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களினால் கிட்டத்தட்ட 200,000 மக்கள் இறந்தனர்.[1] சப்பானின் சரணடைவிலும் அதன் சமூக நிலையிலும் இக் குண்டுவீச்சுக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் முக்கிய விவாதப்பொருளாக விளங்குகிறது.
இரோசிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சின் பின், பரிசோதனை நோக்கத்துக்காகவும், செய்முறை விளக்கங்களுக்காகவும் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் அணுகுண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகள் மட்டுமே அணுவாயுதத்தை கொண்டுள்ளனவாக அல்லது அணுவாயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளாகச் சந்தேகிக்கப்படுவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்ட நாடுகளாக (முதற்பரிசோதனைக் காலவரிசைப்படி) ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியன அறிவித்துள்ளன. இஸ்ரேல் அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்டிருப்பினும் அது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.[2][3][4] தென்னாபிரிக்கா முன்பு அணுவாயுதங்களை உற்பத்தி செய்திருப்பினும், அதன் இனவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்தபின் தனது ஆயுதங்களை அழித்ததுடன் அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலும் ஒப்பமிட்டது.[5]
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி 2012 அளவில் உலகில் 17,000க்கும் மேற்பட்ட அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 4,300 ஆயுதங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.[2]