அக்கிரகாரம்
பிராமண சிற்றூர் / From Wikipedia, the free encyclopedia
அக்கிரகாரம் (Agraharam) அக்ராரம், அக்ரஹாரம், அகரம் என பலவகையில் தென்னிந்தியாவில் அழைக்கப்படுவது பிராமணர் குடியிருப்பான பாரம்பரிய பகுதியாகும். அக்கிரகாரம் பழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. இவை கடோகா மற்றும் போயா என்றும் சிலபகுதிகளில் அழைக்கப்படுகின்றன.[1]
பொதுவாக அக்கிரகாரம் என்பது கோயிலைச் சுற்றி ஒரு மாலை போன்று, தெருவின் இருபுறங்களிலும் வீடுகளைக் கொண்டும், கிராமத்தின் மையத்தில் கோயிலைக் கொண்டும் இருக்கும். இதனால் கோயிலைச் சுற்றி மாலைபோல குடியிருப்புகள் அமைந்திருக்கும். கட்டடக்கலை மற்றும் நகர-திட்டமிடல் ஆகியவை பாரம்பரிய இந்து கட்டடக்கலையைக் கொண்டதாக இருக்கும். ஒரு அக்கிரகாரமானது தெருவின் இரு புறமும் வடக்கு தெற்காக இரு வரிசையில் வீடுகளைக் கொண்டதாக இருக்கும். போதுவாக அக்கிரகாரத்தின் இறுதியில் (ஈசானிய பாகத்தில்) சிவன் கோயிலைக் கொண்டும் மறு இறுதியில் (மேற்கு பாகத்தில்) விஷ்ணு கோவிலைக் கொண்டு இருக்கும்.[2] இதற்கு ஒரு நல்ல எடுதுக்காட்டு தமிழ்நாட்டில் உள்ள வடிவீஸ்வரம் ஆகும்.
பிராமணர்கள் அக்கிரகாரங்களை விட்டு நகர்ப்புற பகுதிகளுக்கு தொழில்கள் மற்றும் வேலைகள் நிமித்தமாக வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர். இதனால் அக்கிரகாரத்து, பாரம்பரிய வீடுகள் வேகமாக மறைந்து பல கற்காரைக் கட்டடங்களாக மற்றும் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன. பல்லவர் காலத்தில் வேதங்களைப் பின்பற்றியதிலிருந்து, தென்னிந்தியாவில் அக்ரஹாரங்கள் தொடங்கப்பட்டன.