From Wikipedia, the free encyclopedia
ஹன்டி பேரின்பநாயகம் (Conscience Handy Perinbanayagam, மார்ச் 28, 1899 - டிசம்பர் 11, 1977) இலங்கைத் தமிழ் கல்விமானும், ஆசிரியரும், சமூக சேவையாளரும், காந்தியவாதியும், இடதுசாரி அரசியல்வாதியும், கட்டுரையாளரும் ஆவார். யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர்.
ஹன்டி பேரின்பநாயகம் | |
---|---|
பிறப்பு | ச. ஹன்டி பேரின்பநாயகம் மார்ச்சு 28, 1899 மானிப்பாய், யாழ்ப்பாணம் |
இறப்பு | திசம்பர் 11, 1977 78) | (அகவை
பணி | பாடசாலை அதிபர் |
அறியப்படுவது | சமூக சேவையாளர், காந்தியவாதி, கல்விமான், எழுத்தாளர் |
கிறித்தவக் குடும்பம் ஒன்றில் மானிப்பாயைச் சேர்ந்த சரவணமுத்து என்பவருக்குப் பிறந்த ஹண்டி பேரின்பநாயகம் சிறு வயதிலேயே கிறித்தவ மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். மானிப்பாய் மெமோரியல் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும்,[1] பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் உயர்கல்வியையும் பயின்றார். 1924 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக இளங்கலைத் தேர்வில் தேறி பட்டம் பெற்றார்.[2] யாழ்ப்பாணக் கல்லூரியில் 1944 மார்ச் வரை ஆங்கிலம், இலத்தீன் மொழி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிறிது காலம் வழக்குரைஞராக கொழும்பில் பணியாற்றினார்.[1] 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததை அடுத்து அவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் 1949 முதல் 1960 வரை அதிபராகப் பணியாற்றினார்.[3]
இலங்கையின் விடுதலைக்காக முதல் முறையாக அமைப்பு ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசை ஆரம்பித்தவர்களில் பேரின்பநாயகமும் ஒருவர். ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை இளைஞர் காங்கிரஸ் மூலம் முன்வைத்தார்.[4]
இரண்டு அதிகாரபூர்வ மொழிகளுடன் இலங்கை ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருந்தார். இருமுறை நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுப் படுதோல்வி அடைந்தார். முதலில் 1947 தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார்.[5] பின்னர் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் உடுவில் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[6]
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு | |
---|---|---|---|---|---|
1947 நாடாளுமன்றம் | வட்டுக்கோட்டை | சுயேச்சை | 1,716 | தெரிவு செய்யப்படவில்லை | |
1960 மார்ச் நாடாளுமன்றம் | உடுவில் | சுயேச்சை | 1,241 | தெரிவு செய்யப்படவில்லை |
1949 ஆம் ஆண்டு அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவராக ஹன்டி பேரின்பநாயகம் பதவி வகித்தார். 1927 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்த போது அவருக்கான வரவேற்புக் குழுவிலும் முக்கிய பங்கு வகித்தார்.[3] அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தில் தலைவராகப் பணியாற்றினார்.[4] 1961 ஆம் ஆண்டில் தேசிய கல்வி ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.