இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
வீரமுனை என்ற கிராமம் கிழக்கிலங்கையின் தென்பாலுள்ள காரைதீவில் இருந்து மேற்கு நோக்கிய அம்பாறை வீதியில் சம்மாந்துறையை அடுத்து அமைந்துள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மை சாகுபடி செய்யும் விவசாயிகளாவர்.[1][2]
வீரமுனை | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
கண்டியை தலைநகரமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்க மன்னன் சோழ நாடு சென்று சோழநாட்டு நாட்டு இளவரசி சீர்பாததேவியை மணந்தான். பின்னர் தனது ஆட்சிமைக்குட்பட்ட பிரதேசத்தை தனது மனைவிக்கு காட்டும்பொருட்டு கடல் வழியாக கப்பலில் இலங்கைக்கு செல்ல ஆயத்தமானார். இளவரசியின் தந்தையார் தனது மகளுக்கு துணையாக தனது உறவினர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார், கப்பலானது கடல்வழியாக இலங்கை நோக்கிவருகையில் திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரத்தின் முன்பாக கப்பல் எத்திக்கும் நகராமல் நிற்கவே, இதற்கான காரணத்தை கண்டறிய கப்பலில் வந்தோரில் சிலர் கடலில் தேடியபோது ஒரு விநாயகர் சிலை தடுத்து நிறுத்தியமை கண்டு சீர்பாததேவியும் ஏனையோரும் அதிசயித்தனர்.
விநாயகரை மேலே கொண்டுவரப் பணித்த சீர்பாததேவி, கப்பல் தங்குதடையின்றி சென்று எங்கு கரை சேருகின்றதோ அங்கு ஆலையம் அமைப்பேன் என வேண்டினார். இளவரசியின் வேண்டுதலையடுத்து ஓடிய கப்பல் மட்டக்களப்பு வாவியினூடாக சென்று வீரமுனையில் கரைதட்டி நின்றது. கீழே இறங்கிய சீர்பாததேவி தன்னுடன் வந்த மக்களைக் கொண்டு வீரமுனையில் விநாயகருக்கு கோயில் அமைத்தாள். இவ்வாலயத் திருப்பணிக்கு உதவுமாறு அயலில் உள்ள மக்களுக்கு வாலசிங்க மன்னன் உத்தரவிட்டான்.
கடல் வழியாக யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக ‘சிந்து யாத்திரை’பிள்ளையார் என பெயர் சூட்டினார், (சிந்து என்றால் கடல்) அது பிற்காலத்தில் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் என அழைக்கப்படலாயிற்று. அத்தோடு இவ்வாலயத்துக்கு சின்னமாக அரவிந்த மலர்,செங்கோல்,கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும், சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமானது எதிர்காலத்தில் சிறப்புற்று விளங்கும் பொருட்டு வயல் நிலங்களையும் வழங்கி மானியமாக சாசனம் செய்து அதனைச் செப்பேட்டில் பொறித்து ஆலயத்தில் சேமிக்கச் செய்தான் வாலசிங்க மன்னன். அத்துடன் இம் மக்கள் சாதி,குல வேறுபாடுகளின்றி அரசியின் பெயரைக் கொண்டு “சீர்பாதகுலம்”என வகுத்தான் மன்னன் வாலசிங்கன். சீர்பாததேவியின் வழித் தோன்றல்களான இம்மக்கள் "சீர்பாதகுலம்" என்று அழைக்கப்படுகின்றனர்.
இக்கிராமம் அடிக்கடி இனவாதிகளின் துன்புறுத்தலுக்கு இலக்காவதுண்டு. 1990 ஆகத்து 12 இல் இக்கிராமத்தவர்களில் 400 இற்கும் அதிகமானோர் இலங்கைப் படையினராலும், ஊர்காவல்படையினராலும் கொல்லப்பட எஞ்சியோர் உடுத்த உடையுடன் அகதிகளாக ஓடினர். அக்காலத்தில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டோர் இன்று வரை வீடு திரும்பவில்லை.
ஓடிய மக்களில் பலர் திருக்கோவில், தம்பிலுவில் பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து விட்டு அரசாங்கத்தின் மீள் குடியேற்றத்துக்கு ஏற்ப கிராமம் திரும்பி வாழ்க்கையை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.
இங்கு சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம், வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயமென மூன்று கோவில்களும், கல்வி வளர்ச்சிக்கென இராமகிருஷ்ண சங்க வித்தியாலயமும் அத்துடன் ஈழப்போரில் தாய் தந்தையரை இழந்த சிறார்களை வைத்துப் பராமரிப்பதற்கென சீர்பாததேவி சிறுவர் இல்லமும் மற்றும் கலை இலக்கிய வளர்ச்சிக்கென இளையநிலா கலை இலக்கிய மன்றமும் அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.