From Wikipedia, the free encyclopedia
லுங்மன் கற்குகை (Longmen Grottoes, எளிய சீனம்: 龙门石窟; மரபுவழிச் சீனம்: 龍門石窟; பின்யின்: lóngmén shíkū) என்பது மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்தின் புராதன நகரான லொயாங் நகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பண்பாட்டு முக்கியத்துவம் மிகுந்த இடமாகும். லுங்மன் பள்ளத்தாக்கின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கிடையிலும் போக்குவரத்தின் முக்கிய இடமாக இது திகழ்கிறது.[1] இவ்விடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேரெதிர் நிலையில் மலைகள் உள்ளன. நடுவில் ஈஹொ ஆறு ஓடுகின்றது.[2][3][4] எழில் மிகுந்த இயற்கைக் காட்சித் தலமான இவ்விடத்தின் காலநிலை மக்களுக்கு ஏற்றதாக இருப்பதனால் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறாது. லுங்மன் கற்குகை, கான்சு மாநிலத்தில் உள்ள தங்ஹுவாங் முகௌ கற்குகை, சாங்சிதாதொங் யுங்காங் கல்குகை ஆகிய சீனாவின் மூன்று குகைகளும் சீனாவின் கல் கலைக் களஞ்சியம் என அழைக்கப்படுகின்றன. மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்தைச் சேர்ந்த லொயாங், சீனத் தேச நாகரீகத்தின் துவக்க இடங்களில் ஒன்றாகும். இந்நகரில் அமைந்துள்ள லுங்மன் கற்குகை சுமார் 1500 ஆண்டு கால வரலாறுடையது.
லுங்மென் கற்குகை Longmen Grottoes | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | i, ii, iii |
உசாத்துணை | 1003 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2000 (24th தொடர்) |
உலகின் முக்கிய மூன்று மதங்களில் ஒன்றான பௌத்த மதம் கி.பி. 206 முதல் 220ன் இறுதிவரை சீனாவில் நுறைந்தது. கி.பி.500ஆம் ஆண்டு காலப் பகுதியில், சீனாவின் பெய்வெய் வம்சக் காலத்து பேரரசர் புத்த மத நம்பிக்கையுடையவர். எவ்வளவு புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கப்படுகிறதோ புத்தர்கள் அவ்வளவுக்கு புத்தர் பயன் தருவார் என்று அப்போது கூறப்பட்டது. இதனால், அதிகமான புத்தர் சிலைகளைச் செதுக்க வேண்டும் என்று பெய்வெய் வம்சக் காலப் பேரரசர் முடிவு செய்தார். எனவே லுங்மன் கற்குகை அமைந்துள்ள இவ்விடத்தின் கற்பாறை தரமானதாக இருந்ததால் பணடைக்காலத்தில் இங்கு கற்குகைகள் செதுக்கப் பட்டது. 400க்கும் அதிகமான ஆண்டுகள் கால உழைப்பு மூலம் லுங்மன் கற்குகை தற்போதைய அளவைக் கொண்டுள்ளது.
இன்று வரை பாதுகாக்கப்பட்டுவரும் இக்கற்குகையிலுள்ள 90 விழுக்காட்டுக்கு மேலான சிறிய குகைகள் கி.பி.400-ஆம் நூற்றாண்டு முதல் 600ஆம் நூற்றாண்டு வரையான பெய்வெய் வம்சக் காலத்திலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையான தாங் வம்சக் காலத்திலும் செதுக்கப்பட்டன.[5][6]
கி.பி. 471ஆம் ஆண்டில் இங்கு கற்குகை செதுக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி 477ஆம் ஆண்டு வரை சுமார் 400 ஆண்டு காலம் நீடித்தது. இக்கல்குகை 1500 ஆண்டுகால வரலாறுடையது. கிழக்கு மற்றும் மேற்கு மலைகளின் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கற்பாறையில் 2300 க்கும் அதிகமான கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன.இக்குகைகளில் இதுவரை பாதுகாப்பாக பராமரிக்கப்படும் கற்குகைகளின் எண்ணிக்கை 1300 ஐத் தாண்டியுள்ளது.[7] இக்குகைகளில் 3,600-க்கும் அதிகமான கல்லறை வாசகங்களும் 50-க்கும் அதிகமான பௌத்த கோபுரங்களும் 97,000 க்கும் மேற்பட்ட புத்தர் உருவச் சிலைகளும் உள்ளன. இவற்றில் பிங்யாங் மத்திய குகை, வுன்சியெ கோயில், குயாங் குகை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கி.பி. 386-ஆம் ஆண்டு முதல் 512-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைப் பிரதிபலிப்பது பிங்யாங் மத்திய குகை. இதை செதுக்குவதற்கு 24 ஆண்டுகள் பிடித்தன. இக்குகையில் 11 புத்தரின் உருவச்சிலைகள் உள்ளன. இவற்றில் சாக்கியமுனியின் உருவச்சிலை குறிப்பிடத்தக்கது. இவ்வுருவச்சிலையின் முன் பக்கத்தில் இரண்டு கம்பீரமான கல்லால் ஆன சிங்கங்கள் உள்ளன. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தலா ஒரு சீடரின் உருவச் சிலையும் ஒரு கடவுள் உருவச்சிலையும் காணப்படுகின்றன. குகையில் பல கடவுள் சிலைகளும் மதப்பாடம் கேட்கும் சீடரின் உருவச் சிலைகளும் உள்ளன.
லுங்மன் கல்குகைகளில் மிகப்பெரியது வுன்சியெ கோயில் ஆகும். தாங் வமிச காலத்தின் கல் செதுக்கல் கலையை விளக்கும் வண்ணம் இங்கு குகைகள் அமைக்கப்பட்டுள்ளன.[8] இக்குகைகளின் நீளமும் 30 மீ. அகலமும் 30 மீ. ஆகும். வுன்சியெ கோயிலில், உருவச்சிலைகள் ஒரு முழுமையான கலைத் தொகுதியாக உள்ளன. இவற்றில் லோசனா எனும் புத்தர் உருவச்சிலை தலைசிறந்த கலைப்பொருளாகத் திகழ்கின்றது. சுமார் 17 மீட்டர் உயரமுடைய இவ்வுருவச்சிலை உயிர்ப்புடன் படைக்கப்பட்டுள்ளது.[9]. கொஞ்சம் கீழே நோக்கிப்பார்க்கும் இத்தேவியின் கண்பார்வை, வழிபாடு செய்வோரின் கண் பார்வையுடன் ஒன்றிணைந்து உள்ளத்தில் ஊடுருவக் கூடிய வகையில் எல்லையற்ற கலை ஈர்ப்புத் தன்மை வாய்ந்தது.
லுங்மன் கற்குகையில் மிகவும் காலத்தால் முந்தையது குயாங் குகையாகும். வடக்கு 'வெய் வமிச' காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகிய விளக்கங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்கு 'வெய் வமிச' காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் செதுக்கல் கலையை ஆராய்வதற்கு மதிப்புள்ள தகவல்கள் இவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன கையெழுத்து வரலாற்றில் மைல் கல்லாக விளங்கும் 20 பொருட்களில் பெரும்பாலானவை லுங்மென் குகைகளில் காணக்கிடைக்கின்றன.
லுங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய பொருட்களும் வரலாற்று தகவல்களும் உள்ளன. இதனால், இது, பெரிய வகையைச் சேர்ந்த கல் செதுக்குதல் கலை அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.
உலகப் பண்பாட்டு மரபுச் செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லுங்மன் கற்குகை 2000 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் நாள் உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. லுங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் மற்றும் பிற்காலத்தின் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) சிறப்புற்றிருந்த மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலிக்கின்றன. மதக் கருப்பொருளை வர்ணிக்கும் இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கல் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. [10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.