13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் பரவலாக அழித்த நிகழ்வு From Wikipedia, the free encyclopedia
13ஆம் நூற்றாண்டு மங்கோலிய படையெடுப்புகள் காரணமாகப் பரவலான மற்றும் நன்றாகப் பதிவு செய்யப்பட்ட அழிவு ஏற்பட்டது. மங்கோலிய இராணுவமானது நூற்றுக்கணக்கான நகரங்களையும், கிராமங்களையும் கைப்பற்றியது. இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றது. ஒரு மதிப்பீட்டின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 11% பேர் மங்கோலியப் படையெடுப்புகளின் போதோ அல்லது அதற்குப் பிறகோ கொல்லப்பட்டனர். இதன் மதிப்பு ஐரோவாசியாவில் சுமார் 3.8 - 6 கோடி மக்களாவர்.[1] இந்த நிகழ்வுகள் மனித வரலாற்றில் மிகுந்த இறப்பை ஏற்படுத்திய கொல்லும் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆலிவர் சான்சலர் என்ற வரலாற்றாளரின் ஆய்வின்படி, மங்கோலியப் படையெடுப்பானது அதற்கு முன்னர் என்றுமே கண்டிராத வகையில் மக்கள் தொகை இடம்பெயர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக நடு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இவ்வாறு நடைபெற்றது. மங்கோலிய நாடோடிக் கூட்டங்கள் வரப்போகின்றன என்ற செய்திகூடப் பயங்கரவாதத்தையும், பயத்தையும் பரப்பியது.[2]
போரிடுவதைத் தவிர்ப்பதற்காகச் செங்கிஸ் கானும் அவரது தளபதிகளும் தங்களது எதிரிகளுக்கு எதிர்ப்பைக் காட்டாமல் சரணடையும் ஒரு வாய்ப்பை வழங்கினர். இந்த எதிரிகள் திறை செலுத்துவதன் மூலம் குடியாட்களாக மாறினர். மங்கோலியக் குடிமக்களை ஏற்றுக்கொண்டனர் மற்றும்/அல்லது துருப்புக்களை மங்கோலிய இராணுவத்திற்கு அளித்தனர். இதற்குப் பதிலாக அவர்களது பாதுகாப்புக்குக் கான் உத்தரவாதம் வழங்கினார். ஆனால் அவர்கள் மங்கோலிய ஆட்சிக்கு கீழ்ப்படிந்தவர்களாக இருந்தால் மட்டுமே இவ்வாறு செய்யப்படும்.
எதிரி ஏதாவது எதிர்ப்பைக் காட்டினால் அதைத் தொடர்ந்து பெருமளவிலான அழிவு, பயங்கரவாதம் மற்றும் இறப்பு ஏற்பட்டது. மங்கோலியப் போர்ப் பிரபுக்கள் என்ற தனது நூலில் தாவீது நிக்கோல் என்ற வரலாற்றாளர், "தங்களை எதிர்க்கும் யாரையும் பயங்கரவாதத்திற்கு உட்படுத்துவதும், மொத்தமாக அழிப்பதும் நன்றாகச் சோதனை செய்யப்பட்ட ஒரு மங்கோலிய உத்தியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.[3] ஒரு எதிரி அடிபணிய மறுத்தால் மங்கோலியர்கள் முழுமையான போர் என்ற ஒரு உத்தியைக் கையாளுவர். மக்கள் மொத்தமாகக் கொல்லப்படுவதும், கட்டடங்கள் அழிவுக்கு உட்படுத்தப்படுவதும் மங்கோலியத் தலைவர்களால் ஆணையிடப்படும். குவாரசமியப் பேரரசு மீதான படையெடுப்புகளின்போது எதிர்ப்புக்காட்டிய முஸ்லிம் சமூகங்களுக்கு இந்த விதிதான் ஏற்பட்டது.
எதிரி மக்கள்தொகையை மொத்த அடிபணிய வைக்குமாறு செய்யும் பய உணர்வின் காரணமாக மங்கோலிய உத்திகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தன. சர்வதேச உறவுகள் குறித்த நவீனக் கோட்பாடுகளின் பார்வையிலிருந்து கண்டால் குவஸ்டர் என்பவரின் கூற்றுப்படி "எதிர்ப்பைக் காட்டி இருந்திருக்கும் படைகளை நகரவிடாமல் முடக்கக்கூடிய பயத்தை பயங்கரவாதமானது ஒரு வேலை உருவாக்கி இருக்கலாம்".[4]
மங்கோலியப் படையெடுப்புகள் விரிவடைந்தபோது மங்கோலிய ஆட்சிக்கான எதிர்ப்பை ஒடுக்குவதில் உளவியல் போர் முறையின் வடிவமானது மிகுந்த திறமை வாய்ந்ததாக நிரூபணமானது. விசுவாசத்தைச் சோதனை செய்வதற்காகத் தனி மங்கோலியப் போர்வீரன் சரணடைந்த கிராமத்திற்குக் குதிரையில் சென்று விவசாயிகளைத் தோராயமாகக் கொல்வது போன்ற கதைகளும் உள்ளன. ஒரேயொரு எதிர்ப்பைக் காட்டும் செயல் கூட முழு மங்கோலிய இராணுவத்தையும் ஒரு பட்டணத்திற்கு வரவழைத்து அங்குள்ள குடிமக்களைத் தடையம் இல்லாமல் அழிப்பதற்கு இட்டுச் செல்லும் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். விவசாயிகள் மங்கோலியத் துருப்புக்களுடன் அடிக்கடி இணைவதும் அல்லது மங்கோலியர்களின் கோரிக்கைகளை உடனே ஏற்றுக்கொள்வதும் பொதுவாகக் குறிப்பிடப்பட்ட ஒன்றாகும்.[5][full citation needed]
சில புவியியல் பகுதிகளில் செங்கிஸ் கானின் படையெடுப்புகள் அதற்கு முன்னர் நடந்திராத ஒட்டுமொத்த அழிவு என பண்டைய கால ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாக ஆசியாவில் பெரும் அளவிலான மக்கள் தொகை மாற்றங்கள் நிகழ்ந்தன. பாரசீக வரலாற்றாளர் ரசீத்தல்தீனின் கூற்றுப்படி, மெர்வில் மங்கோலியர்கள் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும், நிசாபூரில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் கொன்றனர். மொத்தமாகக் கொன்றது மற்றும் பஞ்சத்தின் காரணமாகப் பாரசீகத்தின் மொத்த மக்கள் தொகையானது 25 இலட்சத்தில் இருந்து 2.50 இலட்சமாக மாறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மக்கள் தொகை மாறுதல்களும் சில நேரங்களில் நடைபெற்றன.[6]
13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் மக்கள்தொகையில் கடுமையான வீழ்ச்சியைச் சீனா சந்தித்தது. மங்கோலியப் படையெடுப்புக்கு முன்னர் சீன அரச மரபுகள் சுமார் 12 கோடி குடிமக்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளன. 1279ஆம் ஆண்டுப் படையெடுப்பு முடிக்கப்பட்டதற்குப் பிறகு 1300ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 6 கோடி மக்கள் மட்டுமே வாழ்ந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[சான்று தேவை] பெரும்பாலான வீழ்ச்சிக்கு மங்கோலிய ஆக்ரோஷத்தை மட்டுமே காரணமாகக் குறிப்பிட நமக்குத் தோன்றும் போதும், தற்போதைய அறிஞர்கள் இந்தத் தகவலைப் பற்றிக் கலவையான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். தென் சீனாவில் பதிவு செய்யப்படாத 4 கோடி மக்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்கள் கடவுச்சீட்டின்றி இருந்த காரணத்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வந்திருக்காமல் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உணவுப் பொருள் பற்றாக்குறை காரணமாக வேலையாட்களாக இணைந்த அல்லது சேர்க்கப்பட்ட மொத்த விவசாய மக்கள்தொகையும், ஒரு பெரிய மக்கள்தொகை குறைவுக்கு இட்டுச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிரடரிக் டபுள்யூ. எம் மோட்டே என்கிற அறிஞர், "பதிவுகளைச் சரியாகப் பராமரிக்காத நிர்வாகத் தோல்வியின் காரணமாகவே மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருக்கலாம். அது உண்மையான வீழ்ச்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லை" என்று வாதிடுகிறார். திமோதி புரூக் போன்ற மற்ற வரலாற்றாளர்கள் பெரும்பாலான சீன மக்களை அடிமைகளாக்கும் ஒரு அமைப்பை மங்கோலியர்கள் உருவாக்கினர், இதன் காரணமாக மக்கள்தொகையில் இருந்து பெரும்பாலானவர்கள் மொத்தமாக மறைந்து போயினர் என்று வாதிடுகிறார். வில்லியம் மெக்னீல் மற்றும் தாவீது மார்கன் போன்ற மற்ற வரலாற்றாளர்கள் இக்காலத்தில் மக்கள் தொகை வீழ்ச்சிக்கான முதன்மையான காரணியாக விளங்கியது மங்கோலியர்களால் பரப்பப்பட்ட கறுப்புச் சாவு என்று வாதிடுகின்றனர். மங்கோலியர்கள் என்றுமே அடைந்திராத மேற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பகுதிகளுக்கும் இந்தப் பிளேக்கு நோயானது பரவியது. தாங்கள் முற்றுகையிட்ட நகரங்களுக்குள் நோய் தொற்றி இறந்த சடலங்களைப் பெரிய கவண் வில்களைக் கொண்டு எறிந்ததன் மூலம் உயிரிப் போர்முறையை மங்கோலியர்கள் பின்பற்றினர். இந்தச் சடலங்களின் மீதிருந்த ஈக்கள் கறுப்புச் சாவைப் பரப்பும் வாகனங்களாகச் செயல்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.[7][8][9][10]
உருஸ் மீதான மங்கோலியப் படையெடுப்பின் போது கீவ உருஸின் மக்கள் தொகையில் பாதிப் பேர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போதைய உக்ரைன் பகுதியை இந்த மக்கள் தொகை குறிப்பிடுகிறது.[11] காலின் மெக்கவ்டி என்ற வரலாற்றாளரது மதிப்பீட்டின்படி ஐரோப்பிய உருசியாவின் மக்கள் தொகையானது 75 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாகக் குறைந்தது.[12]
ஐரோப்பா மீதான மங்கோலியப் படையெடுப்பின் போது அங்கேரியின் 20 இலட்சம் மக்கள் தொகையில் பாதி வரை இறந்திருக்கலாம் என வரலாற்றாளர்கள் மதிப்பிடுகின்றனர்.[13]
வட சீனா, நடு ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு மீதான மங்கோலியப் படையெடுப்புகளின் காரணமாக விரிவான அழிவு ஏற்பட்டது. ஆனால் அக்காலத்திற்கான சரியான எண்ணிக்கைகள் கிடைக்கப் பெறவில்லை. பல்கு, பாமியான், ஹெராத், கீவ், பகுதாது, நிசாபூர், கொன்யே-ஊர்கெஞ்ச், இலாகூர், ரியாசான், செர்னிகோவ், விளாதிமிர் மற்றும் சமர்கந்து ஆகிய நகரங்கள் மங்கோலிய இராணுவங்களால் கடுமையான அழிவைச் சந்தித்தன.[14][15] உதாரணமாக, மங்கோலியப் படையெடுப்புக்கு முன்னர் இருந்து சின் அரச மரபின் காலத்தைச் சேர்ந்த சின் இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குக் காணப்படுவதில்லை. பகுதாது முற்றுகையின் போது நூலகங்கள், நூல்கள், இலக்கியங்கள் மற்றும் மருத்துவமனைகள் எரிக்கப்பட்டன. பல புத்தகங்கள் ஆற்றில் தூக்கி எறியப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை டைகிரிசு ஆற்றின் நீரை மையால் கருப்பாகப் பல மாதங்களுக்கு மாற்றின எனக் கதைகள் கூறுகின்றன.[16][17][18][19] "நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட நூலகங்களும், அதன் விலை மதிப்பற்ற பொருட்களும் ஒரே வாரத்தில் எரிக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. ஏராளமான புத்தகங்கள் டைகிரிசு ஆற்றில் தூக்கி எறியப்பட்டன. ஒரு எழுத்தாளரின் கூற்றுப்படி, இப்புத்தகங்களை அடுக்கி இருந்தால் குதிரை மீது அமர்ந்திருக்கும் மனிதன் கடக்கும் அளவுக்கு அவை பெரிதாகப் பாலம் போல் இருந்திருக்கும்."[20]
செங்கிஸ் கான் பெரும்பாலும் எல்லாச் சமயங்களிடமும் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டார். ஆனால் பலநேரங்களில் இவரும், இவரது மங்கோலியர்களும் சரணடைந்த மக்கள் பணிந்தவர்களாக இருந்தாலும் கூட மதப் போரில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துத் தாவோயிய மதத்தைச் சேர்ந்தவர்களும் வரியை அதிகமாகச் செலுத்துமாறு இவர் ஆணையை வெளியிட்டார். எல்லாப் படையெடுப்புகளிலும் வழிபாட்டு இடங்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.[21]
ஈரான் மற்றும் ஈராக்கின் நீர்ப்பாசன அமைப்புகளை மங்கோலியர்கள் அழித்ததன் காரணமாக, இப்பகுதிகளில் நீர்ப்பாசன மற்றும் கழிவுநீர் அமைப்புகளைப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அமைத்த முயற்சியானது வீணானது. இதன் காரணமாக ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமாக, உண்மையான யுத்தங்களில் இறந்த மக்களை விட ஏராளமான மக்கள் பட்டினியால் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பாரசீக வளைகுடா பகுதியில் இருந்த இஸ்லாமிய நாகரிகம் நடுக்காலம் முடியும்வரை இதிலிருந்து மீளவில்லை.[22]
மங்கோலியர்கள் விவசாய நிலங்களை எரித்ததாக அறியப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. கொர்யியோ அரச மரபின் கீழான கொரியா மீது குறைந்தது ஆறு வெவ்வேறு படையெடுப்புகளின் போது, இவர்கள் கங்குவா தீவின் அரண்மனைகளைக் கைப்பற்ற இருந்தபோது, மக்களைப் பட்டினிக்கு உட்படுத்துவதற்காகப் பயிர்களை அழித்தனர். நகரங்கள் மற்றும் பட்டணங்களுக்கு உள்ளே அல்லது அவற்றிலிருந்து வெளியே செல்லும் ஆறுகளைத் திசை மாற்றுவது, நோய்த் தொற்றிய சடலங்களை நகர மதில் சுவர்களைத் தாண்டிப் பெரிய கவண் வில்களைக் கொண்டு எறிவதன் மூலம் மக்களை நோய்த் தொற்றுக்கு உள்ளாக்குவது ஆகிய மற்ற பிற நடவடிக்கைகளும் மங்கோலியர்களால் மேற்கொள்ளப்பட்டன. காபா முற்றுகையின்போது இவ்வாறாகத் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்ட சடலங்களைப் பயன்படுத்தியதன் காரணமாகவே ஐரோப்பாவுக்குக் கறுப்புச்சாவானது கொண்டுவரப்பட்டது என சில ஆதாரங்கள் குற்றம்சாட்டுகின்றன.[23]
மங்கோலியர்களுக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டவர்கள் படையெடுப்புக்கு உள்ளாகவில்லை. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது சுதந்திரமாக விடப்பட்டனர். எதிர்ப்பைக் காட்டிய மக்கள் தொகைகள் பொதுவாக அழிக்கப்பட்டதைப் போலவே வழக்கமாகத் திறை செலுத்தாத மக்களும் அழிக்கப்பட்டனர். இந்த விதியிலிருந்து விலக்காக அமைந்தவற்றில் கொரியாவின் கொர்யியோ அரச மரபும் ஒன்றாகும். அந்த அரசமரபு குடியாள் உறவுமுறைக்குப் பரிவர்த்தனையாக வாடிக்கையான திறைகளைச் செலுத்த இறுதியாக ஒப்புக் கொண்டது. அவர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான தன்னாட்சியும், ஆளும் அரசமரபு ஆட்சியில் இருப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. நேரடியான படையெடுப்பு மற்றும் அழிவுக்கு எதிராகத் திறை மற்றும் குடியாள் உறவுமுறைக்கு மங்கோலியர்கள் விரும்பினர் என்பதை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது. இவ்வாறான அரச மரபுகள் வழக்கமான மற்றும் தொடர்ச்சியான வருமானத்திற்கு ஆதாரங்களாகத் திகழ்ந்தன.
வெவ்வேறு கலாச்சாரங்களில் இருந்து வெவ்வேறு திறைகள் பெறப்பட்டன. உதாரணமாக கொர்யியோவானது 10,000 நீர்நாய்த் தோல்களையும், 20,000 குதிரைகளையும், 10,000 பட்டுத் துணிகளையும், போர் வீரர்களுக்கான ஆடைகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் கைவினைஞர்களை அடிமைகளாகக் கொடுத்தது.[24]
அறிவியலுக்கான கார்னகி கல்வி நிறுவனத்தின் சர்வதேச ஆற்றல் துறையின் ஆய்வின்படி, செங்கிஸ் கானுக்குக் கீழ் ஏராளமான மக்கள் மட்டும் நகரங்கள் அழிக்கப்பட்ட நிகழ்வானது, ஏற்கனவே மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மற்றும் பயிர் செய்த நிலங்கள் மீது வனங்களை வளரச் செய்ததன் மூலம், வளி மண்டலத்திலிருந்து 70 கோடி டன் வரையிலுமான கரியமில வாயுவை நீக்கியிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.[25][26]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.