நாடோடி மக்கள் From Wikipedia, the free encyclopedia
நரிக்குறவர் (Narikuravar) என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி என்ற மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் கருநாடகத்தில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1] இவர்கள் பாரம்பரிய உண்டிகோலால் குருவி அடிப்பது, நரி பிடித்து, மலை சாரல் பகுதியில் வாழ்ந்தவர்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக மணிகள் தயாரித்தல், அதை விற்றறல் போன்ற மாற்றுத் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர். இந்தோ ஆரிய மொழியான வாக்கிரி பூலி மொழி பேசும் நரிக்குறவர்கள் போன்று அழைக்கப்படும் ஹக்கி பிக்கி மக்களுக்கும், தொல்தமிழ்க் குடிகளான குறவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
வாக்ரி பூலி மொழி, தமிழ் | |
சமயங்கள் | |
ஆன்ம வாதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
இந்தோ ஆரிய மக்கள் |
இவர்கள் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி போன்ற சிறு பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். ஹக்கி பிக்கி சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள்.
ஹக்கி பிக்கி மக்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய நடுவண் அரசின் அமைச்சரவை முடிவு செய்தது. 2022 ஆம் ஆண்டு அதற்கான சட்ட முன்வரைவு மக்களவையில் நிறைவேற்றபட்டது.
இவர்களின் அசல் பெயர் வக்ரிவாலா அல்லது குருவிக்கரன் அல்லது நக்கலே அல்லது அக்கிபிக்கி என்பதாகும். ஆனால் தமிழ்நாட்டு முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனின் ஆட்சிக் காலத்தில் நரிக்குறவர் என்று தவறாகப் பெயரிடப்பட்டது. குறவர்கள் என்பவர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிஞ்சித் திணை[மலை]யைச் சேர்ந்த தமிழர்கள். ஆனால் இந்த நரிக்குறவர் குசராத்தை பூர்வீகமாக கொண்ட நாடோடிகள். இவர்கள் துப்பாக்கியால் வேட்டையாடுகிறார்கள். ஆனால் தமிழ் குறவர்கள் விலையும் அம்புகளையும் வைத்து வேட்டையாடுவது, தேன் சேகரிப்பது, மூங்கில் கூடைகளை முடைவது போன்றவையே தமிழ் குறவர்களின் அசல் தொழிலாகும். தமிழ் குறவர்களுக்கும் மராத்தி அக்கிபிக்கிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
இவர்களது பேச்சு மொழி இந்தி, மராத்தி, தெலுங்கு மொழிகளின் கலவையாக உள்ளது. இவர்களின் நாடோடி கலாச்சாரத்தின் காரணமாக வாக்ரி பூலி மொழி என்ற புதிய மொழி உருவானது. இம்மொழிக்கு எழுத்துமுறை இல்லை.
கிட்டு சிரோமனி என்பவரால் திருக்குறள் வாக்ரி பூலி மொழி மொழியில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[2]
இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு அற்றவர்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையையும், நான்கு விதமான திருமண முறைகளைக் கொண்டவர்கள். ஒரே குலதெய்வத்தை வணங்குபவர்கள் அண்ணன் தம்பி முறையாகக் கருதி தங்களுக்குள் பெண் கொடுத்தல் எடுத்தலைச் செய்து கொள்வதில்லை. கைம்பெண்களுக்கு மறுமணம் உண்டு. பிறந்த ஒவ்வொரு பிள்ளைக்கும் இரு பெயர்கள் வைக்கும் முறையைக் கொண்டுள்ளார்கள். இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் உள்ளவர்களாக உள்ளனர்.[3] இவர்கள் சுகாதாரத்தில் கவனம் உடையவர்கள். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும் (உண்டிவில்) திறமை மிக்கவர். பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தோர் ஆவர்.
இந்த சமூக பெண்கள் வண்ணமயமான பாவாடையும், கழுத்தில் மணிகளையும் அணிந்திருந்தனர். ஆண்கள் நீண்ட முடியை வைத்திருப்பார்கள். இந்த மக்கள் காட்டில் வாழ்ந்தனர். அவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் சாப்பிடுவார்கள். வழிபாட்டு முறையில் சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டாலும் (தாதாஜி) சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுளர்களுக்கே முக்கிய இடமிருக்கிறது. சடங்குகளின் அர்ப்பணிப்பு தேவியரையே சேருகிறது. அதேபோல தேவியரே குறிசொல்லும் பூசாரியில் தோன்றி சனங்களுக்குத் தீர்வு வழங்குகிறாள். நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான வழிபாட்டு முறை – எருமைப் பலியிடல்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.