திருக்கோணேச்சரம்
இலங்கையில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia
திருக்கோணேச்சரம் அல்லது திருக்கோணேசுவரம் (Koneswaram Temple of Trincomalee) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருக்கோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. பொ.ஊ 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரின் பதிகங்களில் இத்தலம் வைப்புத் தலமாக இடம்பெற்றுள்ளது. அருணகிரிநாதர் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார். எனவே இத்தலம் திருப்புகழ்த் தலம் எனும் பெருமை பெற்று விளங்குகின்றது. பட்டினத்தார் பாடல்களிலும் இத்தலம் இடம்பெற்றுள்ளது.சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தில் இத்தலம் பற்றிய குறிப்புகள் உண்டு.
திருக்கோணேச்சரம் | |
---|---|
திருக்கோணேச்சரம் | |
ஆள்கூறுகள்: | 8°34′57″N 81°14′44″E |
பெயர் | |
பெயர்: | திருக்கோணேச்சரம் , திருக்கோணமலை |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | கிழக்கு மாகாணம் |
மாவட்டம்: | திருக்கோணமலை |
அமைவு: | சுவாமிமலை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருக்கோணேஸ்வரர்
கோணநாதர்,கோணேசர், மச்சேஸ்வரர் இறைவியார்:- மாதுமையாள் (சங்கரி தேவி) |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழர் கட்டிடக்கலை ( மன்னர் கால ஆலயம் இடிக்கப்பட்டமையால் தற்போதைய கட்டிட கலை) |
கோயில்களின் எண்ணிக்கை: | ஆரம்பத்தில் மூன்று , தற்போது ஒன்று. |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | அறியப்படவில்லை; மிகமுந்திய குறிப்பு பொ.ஊ.மு. 6ம் நூற்றாண்டு,[1] பிந்திய மீள்கட்டுமானம் பொ.ஊ. 1952 |
இராமாயண கால இலங்கை வேந்தன் இராவணன் குல தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் இத்தல இறைவன் கோணேஸ்வரரையே வழிபட்டான் என ஆலய தலபுராணம் கூறுகின்றது. இராமர் இத்தலத்து இறைவனை வழிபட்டதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
ஒரு முறை பிரளய காலத்தில் பகவான் விஷ்ணு மச்சமாக திரு அவதாரம் எடுத்தார். அவதார நோக்கம் நிறைவுற்றவுடன் மீண்டும் வைகுண்டம் செல்ல முற்பட்டார். எனினும் மச்சாவதர மீன் உடலை நீங்கி மீண்டும் அவரால் தன் ஸ்தூல சரீரத்தை பெற முடியவில்லை. ஆகவே கடல் மார்க்கமாக இத்தலத்திற்கு வருகைதந்து மாதுமையாள் உடனுறை கோணநாதப்பெருமானை பிரார்த்தித்தார். இறைவன் திருமாலுக்கு மீண்டும் வைகுண்ட பதவியை வழங்கியதாக இத் தலபுராணம் உரைக்கின்றது.
இலங்கையில் தலபுராணம் காணப்படும் இரண்டு தலங்களுள் திருக்கோணேஸ்வரமும் (தட்சிண கைலாச புராணம்) ஒன்றாகும். மற்றையது திருக்கரசைப் புராணம் ஆகும்.
வருடா வருடம் மகா சிவராத்திரி மறுநாள் தொடங்கி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் இறைவியுடன் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்த்துகீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் மாதுமை (சங்கரி தேவி)அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[2] இத்தலத்தை அத்வைத பராமாச்சாரியாரானா ஆதி சங்கர பகவத்பாதளால் அவர்கள் பதினெட்டு மகா சக்திபீட தலங்களுள் முதல் பீடமாக போற்றி ஸ்லோகம் பாடியுள்ளார்.
இத்தலத்து இறைவன் கோணேஸ்வரர் ஆவார். இறைவியின் திருநாமம் மாதுமையாள் (சங்கரி தேவி ) என்பதாகும். தலவிருட்சம் கல்லாலமரம் ஆகும். தீர்த்தம் பாபநாச புண்ணிய தீர்த்தம் ஆகும். இப்புனித தீர்த்தத்தை தற்காலத்தில் நாம் கிணறு வடிவாகவே தரிசிக்க இயலும். இறைவன் கிழக்கு நோக்கி நர்மதையின் சுயம்பு பாண லிங்க சொரூபராக காட்சி அளிக்கின்றார். இறைவியார் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் மேலிரு கரங்களிலும் வலது இடது என முறையே ஜெபமாலை புஷ்பம் தாங்கி கீழிரு கரங்களை அபய வரதமாக காட்சி தருகின்றாள். தெற்கு நோக்கிய வசந்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் ( எழுந்தருளி மூர்த்திகள் ) அருள் புரிகின்றனர்.
போர்த்துக்கேய படையெடுப்பிற்கு முன் ஶ்ரீதேவி பூதேவி (உபய நாச்சிமார்கள்) சமேத நாரயணப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தனியானதொரு ஆலயத்தில் அருள்பாலித்துள்ளார். எனினும் தற்போதைய இடவசதிகளினால் இச்சன்னதி அமைக்கப்படவில்லை. பழைய திருமேனிகள் கிடைக்கப்பெற்று அவை தியான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனினும் ஶ்ரீதேவி நாச்சியாரின் சிலை கிடைக்கப்பெறவில்லை. பூதேவி நாச்சியாரோடு நாரயணப்பெருமாள் அங்கு காட்சி தருகின்றார்.
வரலாறு
இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான[சான்று தேவை] இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராசா[சான்று தேவை] என்ற மன்னன் பொ.ஊ.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன[சான்று தேவை]. இது தேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை
பொ.ஊ. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்சுடண்டைன் டீ சா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்[சான்று தேவை].கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர்[சான்று தேவை]. அழிக்கப்பட்ட கற்களைக் கொண்டு திருக்கோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.
கல்வெட்டு
காலவோட்டத்தில் கல்வெட்டு சிதைந்த போதும் பலர் அக்கல்வெட்டினை வெற்றிடம் நிரப்பி புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது:
“ | முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்ட பின் தானே வடுகாய் விடும் |
” |
இங்கு குளக்கோட்டன் என்பானே இக்கோவிலிற்கு திருப்பணி செய்தான் (திருத்தியமைத்தான்.) எனப்படுகிறது. குளமும் (கந்தளாய்க் குளம்), கோட்டமும் கட்டுவித்ததால் இயற்பெயர் மறைந்து குளக்கோட்டன் எனும் பெயர் வழங்குவதாயிற்று.
ஆதி கோணேச்சரம்
திருக்கோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருக்கோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம்.
மீள் கட்டுமானம்
மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952இல் திருக்கோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே[சான்று தேவை].
மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்பு
திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.
இத்தலதின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
பூசைகளும் விழாக்களும்
இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. நித்தியப்படி ஆறுகால பூஜைகள் இடம்பெறுகின்றன. பிரதோசம்,பூரணை,சோமவாரம் போன்ற தினங்களில் விஷேட பூஜைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. பதினாறாம் நாள் திருவேட்டைத்திருவிழா, இறைவன் இறைவியிற்கிடையிலான திருவூடல் , ஊடல் களைவு மற்றும் சகோபுரத்திருவிழா (சப்பறத்திருவிழா) என்பன நடைபெறும்.பதினேழாம் நாள் பஞ்ச இரத பவனி நடைபெறும். மறுநாள் பாபநாச தீர்த்தோற்சவம் நடைபெறும். இருபதாம் நாள் மாலை இத்தலத்தில் சமுத்திர தெப்போற்சவம் நடைபெறும். அன்றைய தினம் சுவாமி கடலின் மார்க்கமாக கோண மலையை வலம் வருவார். உலகெங்கும் இல்லாதவண்ணம் சமுத்திர தெப்போற்சவம் இங்கு உண்டு.
ஆடி மாதத்தில் மாதுமை அம்பாளிற்கு என்று தனி பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. ஆடிப் பூரத்தினை தீர்த்தோற்சவமாக கொண்டு பத்து தினங்கள் இந்த பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.
இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரி தினத்தின் மறுநாள் தொடக்கம் ஐந்து நாட்கள் எம்பெருமான் திருகோணமலை நகரை வலம் வந்து அருள்வார். அக்காட்சி கண்கொள்ளாக்காட்சி ஆகும்.
திருக்கோணமலைப் பதிகம்
நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டு
கடலிலிருந்து பார்க்கும்போது இராவணன் வெட்டு
இது திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியருளியது. சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.[3]
123 திருக்கோணமலை, மூன்றாம் திருமுறை
திருஞான சம்பந்தர் தேவாரம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்
..நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
..வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
..மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங்
..கோணமா மலையமர்ந் தாரே! 1
இதிலே,
- "குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
- "குடி தனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
- "தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்து வன்றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
- "கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
- "விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வன்செருத்தி செண்பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
- "துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம் வந்துலவுங் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும் கோவிலை போற்றி பாடுகிறார்.
இவற்றையும் பார்க்கவும்
இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.
- நகுலேச்சரம்
- திருக்கோணேச்சரம்
- திருக்கேதீச்சரம்
- தொண்டேச்சரம்
கோணேச்சரத்தின் நிழல் படங்கள் சில
- கோயிலின் மரத்தில் கட்டப்பட்ட நேர்த்திகள்
- நேர்த்தி ஒன்றின் அருகாமைக் காட்சி
- ஆலய வாயிலில் வீற்றிருக்கும் சிவன் சிலை
- ஆலய வாயிலில் வீற்றிருக்கும் சிவன் சிலை
- அர்த்தமண்டபத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள இராவணன் சிலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.