From Wikipedia, the free encyclopedia
தமிழ் மொழியில் வெளிவந்த சிற்றிதழ்கள் தமிழ்ச் சிற்றிதழ்கள் ஆகும். தமிழ் இதழியலில் எண்ணிக்கையிலும், ஆழத்திலும், பரப்பிலும் சிற்றிதழ்களே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. சிற்றிதழ் என்பது தீவிரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றைடையும் இதழ் ஆகும். கட்டுரை, கருத்துரை, விமர்சனம், திறனாய்வு, துறை ஆய்வு, விவாதம், நேர்காணல், செய்யுள், கவிதை, உரைவீச்சு, சிறுகதை, தொடர்கதை, துணுக்குகள், நகைச்சுவை, சித்திரக்கதை எனப் பல்வேறுவகைப்பட்ட ஆக்கங்களை ஒரு சிற்றிதழ் தாங்கிவரும். சிற்றிதழின் முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே. அதாவது வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதை சிற்றிதழ் பொதுவாக முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் கருத்துருவாக்கத்தில் சிற்றிதழின் பங்கு கணிசமானது. இது வணிக நோக்கில் அமையாததால் கூடிய விமர்சன கருத்து சுதந்திரத்தைக் கொண்டது. புனிதங்களை கட்டுடைப்பதிலும் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதிலும் சிற்றிதழ் பங்கு கொள்கின்றது. விழும்பிநிலை மனிதர்களைப் பற்றியும், பொதுக் கவனத்தைப் பெறாத பிரச்சினைகள் பற்றியும் சிற்றிதழ் குரல் எழுப்புகிறது. கலக்காரர்களின் குரல்களை ஒலிக்க செய்கிறது. சிற்றிதழ் சமூகத்தின் தொடர் கதையாடலின் ஒரு களமாக இருக்கிறது. துறைசார் விடயங்களை ஆய்வுகுட்படுத்தி ஆவணப்படுத்துகிறது.
இருப்பினும், “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். "எதிர்காலத்தில் தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்” என்று சிற்றிதழ்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் கவிஞர் வதிலை பிரபா.
வணிக இதழ்களின் செயல்பாட்டில் பிடித்தமில்லாத நிலையிலும், ஒரு படைப்பாளன் தனது படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளியிடப்படாமல் நிராகரிக்கப்படும் நிலையிலும் தனது கருத்துக்களை மாற்று வழியில் வெளிப்படுத்த விரும்பியவர்கள் கொண்டு வந்ததுதான் பெரும்பான்மையான சிற்றிதழ்கள். இந்தச் சிற்றிதழ்களின் பெயர்கள் கூட சற்று வித்தியாசமாக இருக்கும். சில சிற்றிதழ்களுக்கு ஓரெழுத்துத் தலைப்பாக ‘அ’, ‘ஓ’, ‘ழ’ என்று பெயரிடப்பட்டன. சில சிற்றிதழ்களுக்கு ‘சுண்டெலி’, ‘வெட்டிப்பயல்’, ‘மாமியா’ என்று நகைச்சுவையாகப் பெயர்கள் வைக்கப்பட்டது. ‘இலக்கிய வட்டம்’, ‘கசடதபற’, ‘சதங்கை’, ‘சூறாவளி’ என்று சிறப்பான பெயர்கள் கூட சில சிற்றிதழ்களுக்கு வைக்கப்பட்டன.
1958 ஆம் ஆண்டு சி. சு. செல்லப்பா அவர்கள் வெளியிட்ட எழுத்து சிற்றிதழ்களில் தொடக்க 1950களின் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கத்து.
தமிழம் பலநூறு சிற்றிதழ்களை இணைய வழியே பகிர்கிறது. கீற்றில் பல சிற்றிதழ்கள் எண்மிய வடிவில் வெளியிடப்படுகின்றன. திண்ணை போன்ற இணைய இதழ்கள் பலவும் சிற்றிதழ்களை ஒத்தவை.
முபாரக் இந்தியா, திருச்சியிலிருந்து 1975ஆம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஓர் இசுலாமிய முற்போக்கு இதழாகும். 'முபாரக்' என்ற அரபுப் பதம் 'வாழ்த்து' என்ற பொருளைத்தரும். இதன் ஆசிரியராக ஹனீப் என்பவர் இருந்தார். இதில் இசுலாமியக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள் என்பன இடம்பெற்றிருந்தன.
சிற்றிதழ் 1990களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பொள்ளாச்சி நசன் ஆவார். இது தமிழ் சிற்றிதழ்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
வானம்பாடி, 1980களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது ஈழமக்கள் படும் துயரங்களை உள்ளடக்கிய உரை வீச்சுகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.