From Wikipedia, the free encyclopedia
சி. கா. செந்திவேல் (இலங்கை) ஒரு நீண்டகால இடதுசாரிச் செயற்பாட்டாளர் ஆவார். தற்போது இவர் புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளாராக செயற்படுகிறார்.
இவர் இளமைக் காலத்திலேயே பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, மார்க்சியவாதியாக செயற்பட ஆரம்பித்தார். தனது 23 வயதில் இவர் யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமைக்கு எதிரான ஒக்டோபர் எழுச்சிஅணிவகுப்பில் கலந்து கொண்டவர். அதனைத் தொடர்ந்து தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற வெகுசன போராட்டங்கள் பலவற்றில் இவர் கலந்து கொண்டார்.
இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் நூல் வெகுஜனன் என்ற புனைபெயரில் இவர் இராவணாவுடன் (ந. இரவீந்திரன்) இணைந்து எழுதிய நூலாகும்.1989இல் முதல்பதிப்பாக வெளிவந்த இந்நூல் 2007இல் சென்னையில் சவுத் விஷன் மூலம் இரண்டாவது பதிப்பாக வெளிவந்தது. சமூகவிஞ்ஞான நோக்கில் மனிதரும் சமூக வாழ்வும் எனும் நூலினை 1994இல் எழுதினார். தொடர்ந்து இலங்கை இடதுசாரி இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள் எனும் இடதுசாரி இயக்க வரலாற்று நூலை 1995 இல் எழுதினார். 2013இல் வடபுலத்துப் பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும் எனும் கம்யூனிஸ்ட் மு. கார்த்திகேசன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். தொடர்ந்து 2014இல் தோழர் மணியம் நினைவுகள் நூலை புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சியின் நிறுவகரான கே. ஏ. சுப்புரமணியம் அவர்களின் நினைவுகளை தொகுத்து அவரது 25வது ஆண்டு நினைவு தினத்தில் வெளிக்கொணர்ந்தார். புதியபூமியில் வெகுஜனன் எனும் புனைபெயரில் எழுதிவந்த வட்டுக்கோட்டை முதல் முல்லைத்தீவு வரை எனும் இவரது நூல் 2018இல் புதியநீதி வெளியீடாக வெளிவந்து இலங்கையில் பலபாகங்களிலும் புலம்பெயர்தேசங்களிலும் அறிமுகநிகழ்வுகள் பல இடம்பெற்றன. 1995இல் வெளிவந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன் எனும் சிறு நூலில் வெகுஜனன் என்ற புனைபெயரில் அவர் பற்றி கட்டுரை எழுதியுள்ளார். 2002இல் வெளிவந்த பெண்விடுதலையும் சமூக விடுதலையும் எனும் நூலிலும் அதே புனைபெயரில் கட்டுரைகள் எழுதியுள்ளார். புதிய பூமி, புதிய நீதி எனும் அரசியல் தத்துவார்த்த பத்திரிகையில் ஆசிரியராக இருந்து பலகட்டுரைகள் எழுதியுள்ளார். செம்பதாகை எனும் தத்துவார்த்த ஏட்டிலும் தேசிய பத்திரிகைகளிலும் புனைபெயர்களில் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதியிருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.