From Wikipedia, the free encyclopedia
குரு தட்சணை அல்லது குரு காணிக்கை என்பது குருகுலத்தில் கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்குத் தங்கம் போன்ற அணிகலன்களாகவோ, தானியமாகவோ அல்லது பசு போன்ற கால்நடைகளாகவோ அல்லது குருவிற்கும், குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குருவிற்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கையாகும்.[1][2] [3] ஒரு சீடன் குருவிற்கு குருதட்சணைக் கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக் கல்வி கற்று முடிந்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சணையைப் பெற மறுத்துவிட்டார். பின் கிருஷ்ணர், குருபத்தினியை அணுகி குரு தட்சணையாக யாது வேண்டும் என்று கேட்க, குருபத்தினி கண்ணீர் மல்க குரு தட்சணை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குருபத்தினியின் மகனை தேடிக் கண்டுபிடித்து, குருவிற்கு அவரது மகனையே குரு தட்சணையாகச் சமர்ப்பித்தார்.
அருச்சுனனின் குருவான துரோணாச்சாரியரின் சிலையை செய்து, அவரையே மானசீக குருவாகக் கொண்டு, விற்கலையைப் பயின்ற வேடுவகுல இளைஞன் ஏகலைவனிடம், துரோணாச்சாரியார் அவனது வலதுகை கட்டைவிரலையே குரு தட்சணையாகப் பெற்றார் என மகாபாரதம் கூறுகிறது.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குருகுல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று, அவனைத் தேர்ச்சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.
பின்னர் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று அருச்சுனன் துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச்சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சணையைச் சமர்ப்பித்து விட்டான்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.