From Wikipedia, the free encyclopedia
கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி (Valvil Ori)[1] சிறந்த வில்லாளி.[2][3] கொல்லிமலைக்கும்[4] அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார். தமிழகத்தின் கொல்லிமலைப்பகுதியில் ஆண்டுதோறும் வல்வில் ஓரியின் நினைவாக திருவிழா கொண்டாடப்படுகிறது.[5]
ஒரு முறை வல்வில் ஓரி ராசபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட செல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்கு பன்றிக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும், அந்த அம்புபட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்தது. இதைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோதித்ததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவபெருமானுக்கு ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனை குறிக்கும் வகையில் அந்த ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானை குறிக்கும் வகையில் முள் புதரின் முன் பன்றி வடிவமும், வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும், பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான்.[6] நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான்.[7] நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான்.[8] புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன.[9]
Seamless Wikipedia browsing. On steroids.