மு. ஹா. மு. ஷம்ஸ்
From Wikipedia, the free encyclopedia
எம். எச். எம். ஷம்ஸ் (மார்ச் 17, 1940 - ஜூலை 15, 2002) இலங்கையின் சிறந்த ஊடகவியலாளரும், கவிஞரும், சிறுகதை மற்றும் நாவலாசிரியருமாவார். அத்துடன் இவர் பல்வேறு மேடை நாடகங்களையும் இயற்றி அவற்றை நெறிப்படுத்தியுமுள்ளார். தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் முஹம்மது ஹாமீம், பத்திமா ரஸீனா தம்பதிகளுக்கு புதல்வாராகப் பிறந்தார்.
எம்.எச்.எம் ஷம்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | எம்.எச்.எம் ஷம்ஸ் மார்ச்சு 17, 1940 திக்குவல்லை, இலங்கை |
இறப்பு | சூலை 15, 2002 62) | (அகவை
இருப்பிடம் | இலங்கை |
பணி | ஊடகவியலாளர் |
சமயம் | இஸ்லாம் |
வாழ்க்கைத் துணை | பாத்திமா பாகிரா |
பிள்ளைகள் | சபூக், பாகிம், பாரிஸ் |
இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான தினகரன் ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
1958 - 1959 களில்இ எழுதத் தொடங்கிய எம்.எச்.எம். ஷம்ஸே “காங்கிரிட்” கவிதைகள் எனும் படக்கவிதைகளை அறிமுகம் செய்தவர். இவரது “காங்கிரிட்” கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
1960 களில் வெளியான “இன்ஸான்” பத்திரிகையே எம்.எச்.எம். ஷம்ஸிற்கு முகவரியை பெரிதாகப் பெற்றுக் கொடுத்தது. “இன்ஸான்” பத்திரிகையில் இவருடன் சமகாலத்தில் எழுதியோரில் கலைவாதி கலீல், பண்ணாமத்துக் கவிராயர் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களாவர்.
1970 - 80 களில் “ஆசிரியர் குரல்” என்ற தொழிற்சங்கப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், “சாளரம்” என்ற பெயரில் இலங்கை வானொலியில், அவர் நடாத்திய இன நல்லுறவுக்கான நிகழ்ச்சித் தொடருக்காக “உண்டா” விருதினையும், அறிவுத் தாரகை, பல்கலை வித்தகர் போன்ற விருதுகளையும், சமாதான விருதுகள், இலக்கிய விருதுகள் பலவும் பெற்றுள்ளார்.
நீள்கரை வெய்யோன், ஸ்திராக்கி, வல்லையூர்ச் செல்வன், பாஹிரா, அபூ பாஹிம், அஷ்ஷம்ஸ், ஷானாஸ் என்ற புனைப் பெயர்களிலேயே இவர் பத்திரிகைகளிலும், சிற்றேடுகளிலும் எழுதி வந்தார்.
அழகியல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள் எழுதி வந்தாலும், இன்ஸானின் பின்னரே ஷம்ஸ், சமூக நோக்குள்ள கவிதைகளையும், கதைகளையும் படைத்திருக்கின்றார்.
இலங்கையில் மகாகவி உருத்திரமூர்த்தியின் பின்னர் அதிகமான “வெம்பா”க்களைப் படைத்தவர் எம்.எச்.எம். ஷம்ஸ்.
வெம்பாக்களில் பதச் சோறாய் ஒன்று
'ஆறுதரம் சென்றவராம் மக்கா
ஹாஜி வரவேற்பு மிகப் பக்கா
காரில் அவர் வந்திறங்கக்
கந்தலுடைப் பெண் வழியில்
பார்த்துவிட்டாள் ; ஆம் அவரின் அக்கா !'
எழுதிய நூல்கள்
- நூல் விமர்சனம் (1975) - கூட்டுமுயற்சி
- மாத்தறை காஸிம் புலவர் (1978)
- இன்றை ஈழத்துப் புதுக் கவிதைகள் (1984)
- தென்னிலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1987)
- “ஹைக்கூ“ எழுதுவது எப்படி? (1988)
- விலங்குகள் நொருங்குகின்றன (1988) - கூட்டுமுயற்சி
- பதுர் ஒரு வரலாற்றுத் திருப்பம் (1989) - கூட்டுமுயற்சி
- யாழ்ப்பாணத்தின் மன்றாட்டம் (மொழிபெயர்ப்பு) (1998)
- கிராமத்துக் கனவுகள் (1999)
- மானுட கீதம் (சமாதானப் பாடல்கள்) (1999)
- புதுயுகத் தலைவி (இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பற்றியது) (1999)
- நண்பர்கள் (மொழிபெயர்ப்பு) (2002)
புகழ்பெற்ற பாடல்கள்
- வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே (பாடியவர்: நிரோசா விராஞ்சினி) (1994)
- மலர்ந்ததே கமலம் (1995)
- போர்க்களமது தனியே (1997)
- கருமேகம் கலையாதோ (1997)
- வண்ணாத்துப் பூச்சி (சிறுவர் பாடல் ஒலிப்பேழை) (2000)
பெற்ற விருதுகள்
- அறிவுத் தாரகை (கலாச்சார அமைச்சு) 1992
- “உண்டா“ (ஒலிபரப்புத் துறைக்கான விருது) 1996
- சமாதான விருது (மக்கள் சமாதான இலக்கிய அமைப்பு) 1996
- இலக்கிய விருது (கொழும்புப் பலைக்லைக் கழகம்) 1999
- பல்கலை வித்தகர் (அம்பாறை மாவட்ட க.ப சங்கம்) 2000
- சமாதான விருது (கல்வியமைச்சு) 2000
- சாகித்திய விருது (இலங்கை அரசு) 2000
- இசைப்பாடல் துறைக்கான விருது (ப்ரியநிலா கலாலயம்) 2001
பங்களிப்புச் செய்த பத்திரிகைகள்
- நேர்வழி (1978)
- அஷ்ஷுரா (1982 - 1986)
- செய்தி மடல் (1986 - 1991)
- பாமிஸ் (1983)
- தினகரன்
வெளி இணைப்புகள்
- எம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்வும் இலக்கியப் பங்களிப்பும் [தொடர்பிழந்த இணைப்பு]
- எம்.எச்.எம். ஷம்ஸின் வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறப் பாடல் https://www.youtube.com/watch?v=WsM6YtZpbP4
- மேலதிக தகவல்களுக்காக பார்க்க -
- நூலக எண்: 1672 பக்கங்கள் 56-64
- நூலக எண்: 4293 பக்கங்கள் 106-109
- நூலக எண்: 13958 பக்கங்கள் 85-87
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.