தென்னிந்திய வழிபாட்டிட அமைப்பு From Wikipedia, the free encyclopedia
கோயில் அல்லது கோவில் (பொருள்: கடவுளின் குடியிருப்பு[N 1]) என்பது திராவிடக் கட்டிடக்கலை கொண்ட இந்து கோவிலின் தனித்துவமான பாணிக்கான தமிழ்ச் சொல். கோயில் மற்றும் கோவில் [1] ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் மொழியில், கோவில் என்பது தமிழ் இலக்கணப்படி சரியான சொல் என்று அறிஞர் சிலரால் கூறப்படுகிறது.[2][3][N 2]
சமகால தமிழில், "வழிபாட்டிடம்" என்பதைக் குறிக்க 'கோவில் ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அண்மைய உரைகளில், கோவில் பல இந்துக்களால் ஆலயம், தேவஸ்தானம் என்றும் குறிப்பிடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் துறவி வள்ளலாரின் பக்தர்கள் பயன்படுத்தும் மற்றொரு சொல் அம்பலம். மற்றொரு சொல் 'தளி'[4][5] அதாவது கோயில் என்றும் பொருள்.
கோயில் அல்லது மந்திர் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில் கோயில்[கு 1] என்னும் சொல் கோ + இல் எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே கோ என்பது இறைவனையும், இல் என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். எனவே கோயில் என்பது "இறைவன் வாழுமிடம்" என்னும் பொருள் தருகிறது. பொது வழக்கத்தில் கோயில்[6] மற்றும் கோவில்,[7] என்ற இரு சொற்களும் உண்டு. தமிழ் இலக்கண விதிப்படி கோவில்[கு 2] என்றே வருகிறது.
தேவஸ்தானம், அம்பலம் போன்ற சொற்களும் கடவுளை வணங்கும் இடத்தினை குறிக்கும். கோயில் என்பதற்கு ஆலயம் என்றொரு பெயரும் உண்டு. ஆலயம் என்னும் சொல் "ஆன்மா லயப்படுகின்ற இடம்", "ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்" என்ற பொருள் கொண்டது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில், ப்ர் (pr) என்பது வீட்டையும், சமயம் சார்ந்த புனிதக் கட்டிடங்களையும் சேர்த்தே குறித்தது. இதனால் அங்கே இக் கட்டிடங்கள் இறைவன் வாழும் இடங்களாகவே கருதப்பட்டன என்பது பெறப்படுகின்றது. இத்தகைய கட்டிடங்களைக் குறிக்கும் சொற்கள் பல மொழிகளிலும், சொற்பிறப்பியல் அடிப்படையில் பல்வேறு பொருள் உணர்த்துவனவாக இருந்தாலும், தற்காலத்தில் பல்வேறு சமயத்தினருடைய இறைவணக்கத்துக்கான இடங்களைக் குறிக்க அவை பயன்படுவதை அவதானிக்கலாம்.
சைவர்களுக்கு, முதன்மைக் கோயில் சிதம்பரம் கோயில் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆகியவை முதன்மையானவை. அதே சமயம் வைணவர்களுக்கு, திருவரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் திருக்கச்சி காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவை முக்கியமானவை.
தமிழகக் கோயில்களும், இலங்கை கோயில்களும் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன. அவை எப்போதும் அந்தக் கால ஆட்சியாளருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மன்னர்கள் தங்கள் இராசியத்தில் கோயில்களை ஆதரித்தனர். மேலும், அவற்றை நிர்வகிக்க அவற்றிற்கு குளங்களையும், கிராமங்களையும் தானமாக அளித்து சன்னதியுடன் இணைத்தனர்.
இந்து அறநிலையத் துறையின் பதிவின்படி தமிழ்நாட்டில் மட்டும் 36,488 கோயில்கள் உள்ளன. பொது ஊழிக்கு முன்னர் எழுதப்பட்ட சங்க இலக்கியம், தமிழகத்தின் ஆரம்பகால மன்னர்கள் எழுப்பிய சில கோயில்களைக் குறிக்கிறது. பொ.ஊ. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான புகழ்பெற்ற சைவ நாயன்மார் மற்றும் வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் அந்தக் கால கோவில்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை வழங்குகின்றன. பெரும்பாலான கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் பல்வேறு அரசர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவை விவரிக்கின்றன.
மிகவும் பழமையான கோயில்கள் மரம் மற்றும் செங்கல் போன்றவற்றால் கட்டப்பட்டன. ஏறக்குறைய பொ.ஊ. 700 காலக் கோயில்கள் பெரும்பாலும் பாறைகளில் வெட்டப்பட்டதாக, குடையபட்டதாக இருந்தன. பல்லவ மன்னர்கள் கல்லில் கோயில்களைக் கட்டியவர்கள். சோழ மன்னர்கள் (பொ.ஊ. 850–1279) தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் போன்ற பல கோயில்களைக் கட்டி எழுப்பினர். சோழர்கள் கோயில்களில் பல அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களையும், பெரிய கோபுரங்களையும் கட்டினர். பாண்டிய பாணியில் (பொ.ஊ. 1350 வரை) பெரிய கோபுரங்கள், உயரமான மதில் சுவர்கள், மகத்தான கோபுர நுழைவாயில்கள் (இராசகோபுரங்கள்) தோன்றின. விஜயநகர் பாணியானது (பொ.ஊ. 1350–1560) சிக்கலான மற்றும் அழகுக்காக செதுக்கபட்ட ஒற்றைக்கல் தூண்களுக்கு பிரபலமானது. நாயக்கர் பாணி (பொ.ஊ. 1600–1750) பெரிய பிரகாரம் மற்றும் தூண் மண்டபங்களை சேர்த்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.