![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8e/2013_Boston_Marathon_aftermath_people.jpg/640px-2013_Boston_Marathon_aftermath_people.jpg&w=640&q=50)
2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்
From Wikipedia, the free encyclopedia
2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள் ஏப்ரல் 15, 2013 அன்று பாசுடன் மாரத்தானின் போது பிற்பகல் கி.நே.வ நேரம் 2.50க்கு (18:50 ஒ.அ.நே) போட்டி நிறைவுக்கோட்டிற்கு அண்மையிலுள்ள கோப்லி சதுக்கத்தில் உள்ள போயில்சுடன் சாலையில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்த நிகழ்வைக் குறிப்பதாகும்.[2] இந்த குண்டுவெடிப்புக்களில் 3 நபர்கள் உயிரிழந்தனர்;மற்றும் குறைந்தது 144 நபர்கள் காயமுற்றனர்.[1] இது ஒரு விபத்தா அல்லது இதனை விளைவித்தவர்கள் யாரென்று அறியப்படவில்லை.[3]
2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள் | |
---|---|
![]() குண்டுவெடிப்புக்களுக்கு பின்னர் | |
இடம் | பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
ஆள்கூறுகள் | 42°20′59.2″N 71°04′44.1″W |
நாள் | ஏப்ரல் 15, 2013 (2013-04-15) பிற்பகல் 2:50 கி.நே.வ (ஒ.அ.நே−04:00) |
தாக்குதல் வகை | வெடிகுண்டு |
இறப்பு(கள்) | 3 |
காயமடைந்தோர் | குறைந்தளவில் 144[1] |
தாக்கியோர் | அறியப்படவில்லை |
வெடிப்புக்கள் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களின் கூற்றுப்படி இரு வெடிப்புக்களும் ஒன்று நிகழ்ந்த "சில வினாடிகளிலேயே" மற்றதும் நிகழ்ந்துள்ளது.[4][5] நிறைவுக்கோட்டிற்கு அண்மையில் பிடிக்கப்பட்ட ஒளிதக்காட்சியில் இரு வெடிப்புக்களும் 20 வினாடிகள் இடைவெளியில் நடந்துள்ளதாக காட்டுகின்றன.[6]
மாரத்தானின் வாகையாளர்கள் நிறைவுக் கோட்டை தாண்டி இரண்டுமணி நேரம் ஆனபோதும் பெரும்பாலான பிற பங்கேற்பாளர்கள் அப்போதுதான் அவ்விடத்தை அண்மித்துக் கொண்டிருந்தனர்.[7] இவர்கள் நிறைவுக்கோட்டிலிருந்து வேறுபுறம் செல்ல திருப்பி விடப்பட்டனர்.[8]
நிகழ்வின் பாதிப்பாக பாசுடன் லோகன் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அனைத்து பயணச்சேவைகளும் இரண்டு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டன.[9] மாசச்சூசெட்சு வளைகுடா போக்குவரத்து ஆணையமும் தனது சேவைகளை நிறுத்தி வைத்திருந்தது.[10]
இந்த வெடிப்புக்களைத் தொடர்ந்து நியூயார்க் நகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிரான வண்டிகள் நகரத்தின் மையப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.[11] வாசிங்டன், டி. சி.யிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு பகுதியளவில் வெள்ளை மாளிகையும் காலி செய்யப்பட்டது.[2]
கிழக்கத்திய நேரம் பிற்பகல் 3:00 மணிக்கு ஊஆன் எப் கென்னடி குடியரசுத்தலைவர் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தும் இவற்றுடன் தொடர்புடையதாக துவக்கத்தில் கருதப்பட்டது. பின்னர் இதற்கு எந்த கருவியும் காரணமில்லை என்றும் இரு நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.[12]
இது நிகழ்ந்த பல மணி நேரங்களுக்குப் பிறகு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.[13] இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் யாரெனத் தெரியவில்லை எனவும் அரசு "இதன் அடிமட்டத்தை ஆழ்ந்தெடுக்கும்" எனவும் கூறினார்.[14]
இதனை கூட்டாட்சி புலன்விசாரணை அமைப்பு ஓர் தீவிரவாத தாக்குதலாக கருதி புலனாய்வு செய்வதாக அறிவித்துள்ளது.[15]