இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி
From Wikipedia, the free encyclopedia
இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி அல்லது இசுட்டாக்குஃகோம் அறிகுறித் தொகுப்பு (Stockholm syndrome) என்பது ஒரு கடத்தப்பட்ட பிணையாளியின் (hostage) உள்ளத்தில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட உளவியல் தூண்டற்பேற்றைக் குறிக்கும் பெயராகும். தனக்கு இடர் விளையும் அல்லது விளைய வாய்ப்புள்ளது என்று அறிந்திருந்தும் தன்னைக் கடத்தியவர்மீது ஏற்படும் பற்றுதல் இவ்வறிகுறிகளின் அடிப்படையாகும்.
சுவீடன் நாட்டின் தலைநகரான இசுட்டாக்குஃகோம் நகரில் நிகழ்ந்த ஒரு வங்கிக் கொள்ளையினைத் தொடர்ந்து இவ்விளைவு இப்பெயர் பெற்றது. 1973-ம் ஆண்டு நிகழ்ந்த அக்கொள்ளையின்போது கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களை ஆகஸ்டு 23-ல் இருந்து ஆகஸ்டு 28 வரை பிணையாளிகளாக வைத்திருந்தனர். இந்நிகழ்வின்போது பிணையாளிகளுக்கு அவர்களை அடைத்துவைத்திருந்த கொள்ளையர்கள்மீது ஒருவித உளவுணர்வுத் தொடுப்பு ஏற்பட்டது. இதனால் ஆறு நாட்களுக்குப்பின் அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கொள்ளையர்களின் செயலை ஆதரிக்கத் துவங்கினர். இந்த நிகழ்வையடுத்து ஒரு தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்பில் பங்கேற்ற நீல்சு பெசிரோட் என்ற குற்றவியல் மற்றும் உளவியல் வல்லுநர் முதன்முதலாக இப்பெயர் கொண்டு இவ்விளைவைக் குறிப்பிட்டார்.