வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
From Wikipedia, the free encyclopedia
வேதியியலுக்கான நோபல் பரிசு (சுவீடியம்: Nobelpriset i kemi) ரோயல் சுவீடிய அறிவியல் கழகத்தால், வேதியியலின் பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகளுக்கு வருடாவருடம் வழங்கப்படுகிறது. இது 1896ல் இறந்த அல்பிரட் நோபலின் 1895 உயிலின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். இப்பரிசுகள் வேதியியல், இயற்பியல், இலக்கியம், சமாதானம் மற்றும் மருத்துவத் துறைகளில் வழங்கப்படுகின்றன.[1] நோபலின் உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, இவ்விருது நோபல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதோடு, ரோயல் சுவீடிய அறிவியல் கழகத்தால் தெரிவுசெய்யப்படும் ஐந்து உறுப்பினர்களால் வழங்கப்படுகிறது.[2] வேதியியலுக்கான முதலாவது நோபல் பரிசை, 1901ம் ஆண்டில் நெதர்லாந்தின் ஜாகோபியஸ் ஹென்ரிகஸ் வான் ஹொஃப் பெற்றுக்கொண்டார். ஒவ்வொருவரும் ஒரு பதக்கம், ஒரு சான்றிதழ் மற்றும் பணப்பரிசையும் பெறுவர்.[3] 1901ல் வான் ஹொஃப் 150,782 சுவீடிஷ் குரோனாக்களைப் பெற்றார். இதன் மதிப்பு டிசெம்பர் 2007ல் 7,731,004 சுவீடிஷ் குரோனாக்கள் ஆகும். 2011ல், இப்பரிசு டான் செச்மனுக்கு வழங்கப்பட்டது. இப்பரிசு நோபலின் நினைவு தினமான டிசெம்பர் 10 அன்று ஸ்டொக்ஹோம் நகரில் இடம்பெறும் வருடாந்த விழாவில் வழங்கப்படும்.[4]
குறைந்தது 25 வேதியியலாளர்கள் கரிம வேதியியல் துறையில் பரிசு பெற்றுள்ளனர். இது ஏனைய எல்லாத் துறைகளிலும் அதிகமாகும்.[5] நோபல் பரிசு வெற்றியாளர்களான ஜெர்மனியர்களான ரிச்சர்ட் குன்(1938) மற்றும் அடோல்ப் பியூட்டனன்ட்(1939) ஆகியோர் அந்நாட்டு அரசால் பரிசைப் பெற அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் பின்பு பதக்கத்தையும் சான்றிதழையும் மட்டுமே பெற்றனர். பிரெடரிக் சாங்கர் என்பவரே இரசாயனவியலுக்காக இருமுறை பரிசு பெற்ற ஒரே நபராவார். இவர் 1958 மற்றும் 1980 களில் இப்பரிசை பெற்றார். ஏனைய துறைகளில் இருமுறை பரிசு பெற்றோர்: மேரி கியூரி (இயற்பியலில் 1903ல், வேதியியலில் 1911ல்) மற்றும் லினஸ் பௌலிங் (வேதியியலில் 1954ல், சமாதானத்துக்காக 1962ல்).[6] பரிசு வென்ற நான்கு பெண்கள்: மேரி கியூரி, ஐரீன் ஜூலியட் கியூரி (1935), டொரதி ஹொட்கின் (1964) மற்றும் அடா யொனத் (2009).[7] 2011 வரை, 160 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்கள் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.