விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 9, 2011
From Wikipedia, the free encyclopedia
அஃப்ளாடாக்சின்கள் எனப்படுபவை ஆஸ்பெர்ஜிலஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்த சில இன பூஞ்சைகளால் உருவாக்கப்பட்டு, இயற்கையில் காணப்படும் ஒருவகை பூஞ்சை நஞ்சுகள் ஆகும். இவ்வகை நஞ்சுகளை உருவாக்கும் முக்கியமான இனங்கள், ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளேவஸ் மற்றும் ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் ஆகும். இந்தபூஞ்சை நஞ்சுகள் இதுவரை கண்டறியப்பட்ட நஞ்சுத் தன்மைக் கொண்ட பொருட்களுள் மிகவும் சக்திவாய்ந்த புற்றுநோய் உருவாக்கும் பொருட்களாக அறியப்படுகின்றது. இவை உடலுக்குள் நுழைந்தபின் கல்லீரலில் நிகழும் வளர்சிதைமாற்றம் காரணமாக, வினைபுரியும் ஈபாக்சைடு இடையினங்களாகவோ அல்லது ஹைட்ராக்சில் ஏற்றப்பட்டு குறைந்த தீங்கு விளைவிக்கும் அஃப்ளாடாக்சின் M1 ஆகவோ மாற்றம் பெறுகின்றன. மேலும்...
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/82/Francisbyelgreco.jpg/320px-Francisbyelgreco.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Aspergillus.gif/120px-Aspergillus.gif)
அசிசியின் புனித பிரான்சிசு (1182–1226) ஒரு கிறித்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கன் சபை என்னும் கிறித்தவத் துறவற அமைப்பின் நிறுவனரும் ஆவார். இவர் திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் குருப்பட்டம் பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வு கொண்டு அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை. பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா நகருக்கு எதிராக அசிசி நகர் போர் தொடுத்தபோது, இருபது வயதே நிறைந்த இவரும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்ப்பித்து துறவறம் பூண்டார். 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவறச் சபையைத் தொடங்கினார். மேலும்...