![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/CircularCoordinates.svg/langta-640px-CircularCoordinates.svg.png&w=640&q=50)
வாள்முனை ஆள்கூற்று முறைமை
From Wikipedia, the free encyclopedia
கணிதத்தில் வாள்முனை ஆள்கூற்று முறைமை அல்லது வாள்முனை ஆயம் (Polar coordinate system) அல்லது ஒப்புச்சட்ட முறைமை என்பது ஒரு சமதளத்தில் அமைந்துள்ள எப்புள்ளியையும் முறையாகக் குறிப்பிடும் ஒரு முறைமை ஆகும். இம்முறையில் சமதளத்தில் உள்ள எந்தவொரு புள்ளியையும் ஒரு நீளம், ஒரு கோணம் ஆகிய இரண்டு ஆள்கூறுகளால் குறிக்கப்பெறுகின்றது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/CircularCoordinates.svg/250px-CircularCoordinates.svg.png)
இம் முறையில் நிலையான ஒரு தொடக்கப்புள்ளி உண்டு. சமதளத்தில் உள்ள எப்புள்ளியும் இந்தத் தொடக்கப்புள்ளியில் இருந்து எவ்வளவு தொலைவு உள்ளது, என்று கூறும் நீளம் ஓர் ஆள்கூறு. அந்த நீளத்தை உடைய கோலை அல்லது வாளை, கிடை அச்சில் இருந்து இடஞ்சுழியாகச் சுழற்றி சமதளத்தில் உள்ள அப்புள்ளியை முனை தொடுமாறு இருந்தால் என்ன கோணம் உள்ளதோ, அது மற்றொரு ஆள்கூறாகவும் கொண்டு குறிக்கப்பெறும் ஒரு முறை ஆகும்.
தொடக்கப் புள்ளியைக் நீளம் அளக்கும் ஆரகோலின் அல்லது வாளின் அடிப்புள்ளி என்றும் அழைக்கலாம். இத் தொடக்கப் புள்ளி என்பது கார்ட்டீசிய ஆள்கூற்று முறைமையில் உள்ளது போன்றதே ஆகும். ஆனால் கார்ட்டீசியன் முறைமையில் நீளங்களை அச்சுக்கு இணையாகப் போய் அளப்பது போல் அல்லாமல் நேரடியாக, தொடக்கப் புள்ளியில் இருந்து சமதளத்தில் உள்ள புள்ளியை நேர்கோடால் இணைத்தால் கிட்டுவதே நீளம், அல்லது ஆரத் தொலைவு ஆகும். ஆரக்கோலின் கோணத்தை, கார்ட்டீசிய ஆள்கூற்று முறைமையில் உள்ள கிடை அச்சு (x-அச்சு) திசையில் இருந்து இடஞ்சுழியாக (அதாவது மணிகாட்டித் திசைக்கு எதிர்த்திசையில்) நகர்ந்து அளக்கும் கோணம் ஆகும்.