![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Lilavati_-_Massa.jpg/640px-Lilavati_-_Massa.jpg&w=640&q=50)
லீலாவதி (அரசி)
From Wikipedia, the free encyclopedia
அரசி லீலாவதி (Queen Lilavati; ஆட்சிக்காலம்: 1197–1200, 1209–10, 1211–12) என்பவர் இலங்கை வரலாற்றில் தனது சொந்த உரிமையில் இறையாண்மையாக ஆட்சி செய்த நான்காவது பெண் ஆவார். இவர் பொலன்னறுவை இராச்சியத்தின் அரசரான முதலாம் பராக்கிரமபாகுவின் மனைவியாகப் பிரபலமடைந்தார். அரச வம்சத்தைச் சேர்ந்த இவர், பராக்கிரமபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து, பல்வேறு தளபதிகளின் ஆதரவுடன், மூன்று முறை பொலன்னறுவை இராச்சியத்தை ஆட்சி செய்தார். இவரது வாழ்க்கைக் குறிப்புகள் சூளவம்சம் என்ற நூலில் தரப்பட்டுள்ளன.[1]
லீலாவதி Lilavati | |
---|---|
பொலன்னறுவை அரசி | |
![]() லீலாவதியில் உருவம் பொறிக்கப்பட்ட செப்பு நாணயம் | |
பொலன்னறுவையின் இராணி | |
ஆட்சிக்காலம் | 1153–1186 |
பொலன்னறுவையின் அரசி | |
ஆட்சிக்காலம் | 1197–1200 1209–1210 1211–1212 |
முன்னையவர் | சோடகங்கை, அனிக்கங்கா, லோக்கிசார |
பின்னையவர் | சாகசமல்லன், லோக்கிசார, பராக்கிரம பாண்டியன் |
துணைவர் | முதலாம் பராக்கிரமபாகு |
தந்தை | சிறீவல்லபன் |
தாய் | இராணி சுகலா |
லீலாவதி மன்னர் சிறீவல்லபன், இராணி சுகலா ஆகியோரின் மகளாவார்.[1][2] முதலாம் பராக்கிரமபாகு தக்கிணதேச மன்னரும் லீலாவதியின் மாமாவுமான மனபரணனின் மகன் ஆவார். மனபரணனின் இறப்பின் பின்னர், கீர்த்திசிறீமேவன் தக்கிணதேசத்தின் மன்னரானார். அதன் பின்னர் மனபரணனின் குடும்பம் சிறீவல்லபனுடன் வாழ்ந்து வந்தது. லீலாவதி பராக்கிரமபாகுவை மணந்து கொண்டார்.
லீலாவதியின் குடும்பத்தில் – குறிப்பாக லீலாவதியின் சகோதரன் (இவனும் மனபரணன் என்றே அழைக்கப்பட்டான், மனபரணன் பராக்கிரமபாகுவின் இரண்டு சகோதரிகளான மித்தா, பிரபாவதி ஆகியோரை மணந்தான்), மற்றும் தாய் சுகலா இருவரும் பராக்கிரமபாகுவுடன் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. மனபரணன் பராக்கிரமபாகுவுடன் சண்டைகளில் ஈடுபட்டான்.[2][3]