![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Gutenberg.jpg/640px-Gutenberg.jpg&w=640&q=50)
யோகான்னசு கூட்டன்பர்கு
From Wikipedia, the free encyclopedia
யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது.[1] இவர் கண்டறிந்த அச்சு இயந்திரம் மறுமலர்ச்சிக்கும், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் பரவலுக்கும், அறிவொளிக் காலம் வளர்ச்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும், இயந்திரம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும், பேரளவில் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி பரவவும் உதவியது.[2] அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அச்சிடப்படும் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டது. அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.
யோகான்னசு கூட்டன்பர்கு | |
---|---|
![]() | |
பிறப்பு | யோகான்னசு கென்சுஃபிளைசு சுர் இலாடன் கூட்டன்பெர்கு Johannes Gensfleisch zur Laden Gutenberg அண். 1395 மைன்சு, |
இறப்பு | பிப்பிரவ்ரி , 1468 (அகவை 70) மைன்சு (Mainz) |
தேசியம் | இடாய்ச்சு |
பணி | Engraver, கண்டுபிடிப்பாளர், பதிப்பாளர் |
அறியப்படுவது | நகர்த்தக்கூடிய அச்சு இயந்திரம் கண்டுபிடித்ததற்காக |
சமயம் | கத்தோலிக்கர் |
வாழ்க்கைத் துணை | எல்செ நிசிக்கு சும் கூட்டன்பூர்கு |
நகரும் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிட்ட முதல் ஐரோப்பியர் கூட்டன்பர்க் ஆவார். மேலும் அச்சுத்துறையில் இவர் பல்வேறு பங்களிப்புகளையும் செய்துள்ளார். பேரளவில் அச்சிடக்கூடிய நகரும் எழுத்துரு, எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட அச்சு மை, மர அச்சுக்கூடம் ஆகியன இவரின் கண்டுபிடிப்புகளாகும். இவருடைய எழுத்துரு உலோகக்கலவையாலான பற்றவைப்பு முறையில் உருவாக்கப்பட்ட எழுத்துருக்களாகும். இவருடைய இக்கண்டுபிடிப்புகள் அணைத்தும் நவீன அச்சுக்க்கலையில் மிக அதிக முறையில் வேகமாகவும் எளிதாகவும், குறைந்த செலவில் புத்தகங்கள் அச்சிட பெரிதும் உதவியது. கூட்டன்பர்க் முதன் முதலில் விவிலியத்தை அச்சிட்டு அதனை பலரும் பயன்படுத்த காரணமானார்.