யூத தலைமைச் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
தலைமைச் சங்கம் (எபிரேயம்: סַנְהֶדְרִין sanhedrîn, கிரேக்கம்: Συνέδριον,[1] synedrion) என்பது இசுரேல் நாட்டில் ஒவ்வொரு ஊர்களிலும் இருபது முதல் இருபத்திமூன்று உறுப்பினர்களைக்கொண்ட ஒரு சங்கமாகும். இதனோடு பெரிய தலைமைச் சங்கம் எருசலேமில் 71 உறுப்பினர்களைக்கொண்டு இயங்கியது. இச்சங்கம் சமய வழக்குகளையும் வழக்கங்களையும் மட்டுமே விசாரித்தது. இரண்டாம் கோவில் காலத்தில் இச்சங்கம் எருசலேம் கோவிலில் ஓய்வு நாள் மற்றும் யூத விழா நாட்களைத்தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் கூடியது.[2]
மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது என மரபுப்படி நம்பப்படுகின்றது.[3]. கி.பி. முதல் நூற்றாண்டளவில் இத்தலைமைச் சங்கம் மூன்று வகையில் இயங்கியது. முதல் வகையினர் முக்கிய குடும்பங்களிலிருந்தும் இனக்குழுக்களிலிருந்தும் வந்த மூப்பர்களைக் கொண்டது. இரண்டாம் வகையில் பெரிய குருக்களும் குருக்கள் குடும்ப பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். மூன்றாம் வகையினர் மறைநூல் அறிஞர் இருந்தனர். யூத பெரிய தலைமைச் சங்கத்தின் மொத்த உறுப்பினர் 71 பேர் ஆவர். அதன் தலைவர் யூத தலைமைக் குரு ஆவார். உரோமையரின் ஆட்சிக் காலத்தில் இந்தத் தலைமைச் சங்கம் வலிமைமிக்கதாக விளங்கியது. யூத மக்களின் சமூக-சமய-அரசியல் வாழ்வில் இச்சங்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. கைதுசெய்யும் அதிகாரமும் நீதி வழங்கும் அதிகாரமும் யூதத் தலைமைச் சங்கத்திற்கு இருந்தது. மரண தண்டனை தவிர, பிற தண்டனை விதிக்கும் அதிகாரமும் அதற்கு உண்டு.
வரலாற்றுப்படி இவ்வகை சங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளில் இறுதியானது சுமார் கி.பி 358இல் எபிரேய நாட்காட்டியினை யூத சமயத்தின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தது ஆகும். உரோமைப் பேரரசின் யூத அடக்குமுறை சட்டங்களினாலும், கிறுத்துவ சமயத்தின் பரவலாலும், இவ்வகை சங்கங்கள் இல்லாமல் போயின. அயினும் பிரான்சின் முதலாம் நெப்போலியன் Grand Sanhedrin என்னும் பெயரில் இச்சங்கத்தை மீன்டும் ஏற்படுத்த முயன்றாலும் அது வெற்றி பெறவில்லை. இதேபோல தற்கால இசுரேலிலும் இவ்வகைச்சங்கங்களை ஏற்படுத்த முனைந்துள்ளனர்.
நற்செய்திகளில் இயேசு இவ்வகை தலைமைச் சங்கத்தினர் முன் விசாரிக்கப்பட்டதாக உறிப்புகள் உள்ளன. மேலும் திருத்தூதர் பணிகள் நூலில் பலமுறை இச்சங்கத்தினர் திருத்தூதர்களைக் கைது செய்து விசாரித்ததாகவும், பெரிய சங்கக் கூட்டம் ஒன்றில் கமாலியேல் கலந்து கொண்டதாகவும், இச்சங்க கூட்டம் ஒன்றில் இவர்கள் ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் கல்லெறிந்து கொன்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.[4]