![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Flag_of_Bougainville.svg/langta-640px-Flag_of_Bougainville.svg.png&w=640&q=50)
போகன்வில் தன்னாட்சிப் பகுதி
From Wikipedia, the free encyclopedia
போகன்வில் (Bougainville[2] தோக் பிசின்: Bogenvil[3][4]), அதிகாரபூர்வமாக போகன்வில் தன்னாட்சிப் பகுதி (Autonomous Region of Bougainville) என்பது பப்புவா நியூ கினியின் ஒரு தன்னாட்சிப் பகுதி ஆகும். இப்பகுதியின் பெரிய தீவு போகன்வில் தீவு ஆகும். இத்தீவை விட, புக்கா தீவு மற்றும் வேறு பல தீவுகளும், தீவுத்திடல்களும் இப்பகுதியில் உள்ளன. புக்கா இதன் தற்காலிகத் தலைநகராகும். ஆனாலும், அராவா நகரத்தை எதிராலத் தலைநகராக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
போகன்வில் தன்னாட்சிப் பகுதி Autonomous Region of Bougainville | |
---|---|
குறிக்கோள்: அமைதி, ஒற்றுமை, செழிப்பு | |
நாட்டுப்பண்: எனது போகன்வில்[1] | |
![]() | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | புக்கா 6.3754° S, 155.3807° E |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
அரசாங்கம் | தன்னாட்சிப் பகுதி |
• அரசுத்தலைவர் | யோன் மோமிசு |
சட்டமன்றம் | பிரதிநிதிகள் சபை |
நிறுவுதல் | |
• தன்னாட்சி | 25 சூன் 2002 |
பரப்பு | |
• மொத்தம் | 9,384 km2 (3,623 sq mi) |
மக்கள் தொகை | |
• 2011 மதிப்பிடு | 249,358 |
நாணயம் | கினா (PGK) |
நேர வலயம் | ஒ.அ.நே+11 (ஒசநே+11:00) |
வாகனம் செலுத்தல் | இடது |
அழைப்புக்குறி | +675 |
2011 இல், இப்பகுதியின் மக்கள்தொகை அண்ணளவாக 250,000 ஆக இருந்தது. தோக் பிசின் என்ற கலப்பு மொழி இணைப்பு மொழியாக அதிகம் பேசப்படுகிறது. அத்துடன், பல ஆத்திரனேசிய, கிழக்கு-ஆத்திரனேசிய மொழிகளும் பேசப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள பல பொலினேசிய பிராந்தியங்களில் பொலினேசிய மொழிகளும் பேசப்படுகின்றன. போகன்வில் தீவு. புக்கா தீவு ஆகியன புவியியல் ரீதியாக கொலமன் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தவையாகும். ஆனாலும், இவை சொலமன் தீவுகள் என்ற தனிநாட்டில் இருந்து அரசியல்ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுரீதியாக, இப்பகுதி வடக்கு சொலமன்கள் என அழைக்கப்படுகின்றது.
போகன்வில் பகுதியில் மனிதர்கள் குறைந்தது 29,000 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.[5] குடியேற்றக் காலத்தில் இப்பகுதி செருமனியர்கள், ஆத்திரேலியர்கள், சப்பானியர்கள், மற்றும் அமெரிக்கர்களால் பல்வேறு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. போகன்வில் என்ற பெயர் 1768 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு வந்த பிரெஞ்சு கடற்படைத் தளபதி லூயி ஆன்டன் டி போகன்வில் என்பவரின் பெயரால் இப்பகுதி போகன்வில் என அழைக்கப்படுகிறது.[6]
போகன்வில்லுக்கான பிரிவினைக் கோரிக்கை 1960களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. 1975 இல் பப்புவா நியூ கினி ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை அடைவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் வடக்கு சொலமன்கள் குடியரசு என்ற பெயரில் இப்பகுதிக்கு விடுதலை அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அடுத்த ஆண்டில் இது பப்புவா நியூ கினியுடன் இணைக்கப்பட்டது. போகன்வில் உள்நாட்டுப் போரில் (1988–1998) 20,000 பேர் வரையில் இறந்துள்ளனர்.[7][8] அதன் பின்னர், போகன்வில் தன்னாட்சிப் பகுதி அமைக்கப்பட்டது.
2019 நவம்பர்-திசம்பரில், இங்கு முழுமையான விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில், 98.31% மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.[9][10]