![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/The_green_house_effect.svg/langta-640px-The_green_house_effect.svg.png&w=640&q=50)
பைங்குடில் விளைவு
From Wikipedia, the free encyclopedia
பைங்குடில் விளைவு அல்லது பசுமை இல்ல விளைவு அல்லது பசுமைக்குடில் விளைவு (இலங்கை வழக்கு: பச்சை வீட்டு விளைவு' Greenhouse Effect) என்பது, பூமியின் (அல்லது வேறு கோள்களின்) மேற்பரப்பில் உள்ள வெப்பக் கதிர்வீச்சானது, வளிமண்டலத்தில் இருக்கும் பைங்குடில் வளிமங்களினால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் எல்லாத் திசைகளிலும் கதிர்வீச்சாக வெளிப்படும் தோற்றப்பாடு ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/The_green_house_effect.svg/640px-The_green_house_effect.svg.png)
இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்வீச்சானது, பூமியை அடையும்போது, வளிமண்டலத்தில் உள்ள வளிமமும், முகிலும், நிலத்தில் உள்ள மண்ணும், நீரும் ஒரு பகுதி ஒளிக்கதிர்களைத் தெறிப்பதனால், அவை மீண்டும் வளிமண்டலத்தை விட்டு விண்வெளிக்குள் சென்று விடும். இன்னொரு பகுதிக் கதிர்வீச்சை நிலப்பகுதி உறிஞ்சி, அதன் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை விடக்கூடிய அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிரான வெப்பக் கதிர்வீச்சாக வெளியேற்றும். அந்த அகச்சிவப்புக் கதிர்களில் ஒரு பகுதி வளிமண்டலத்தினுள் வெளிவிடப்படுவதுடன், இன்னொரு பகுதி வளிமண்டலத்தினூடாக விண்வெளியினுள் சென்று விடும். இதன்மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக்கொள்ளப்படும். ஆனால் வளிமண்டலத்தில் இருக்கும் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, வளிமண்டலத்தினூடாக வெளியேற எத்தனிக்கும் அகச்சிவப்புக் கதிர்கள் வெளியேற முடியாமல் இவற்றினால் பிடிக்கப்பட்டு, வளிமண்டலத்தினுள்ளாகவே பல திசைகளிலும் வெளியேறும். இதனால் வளிமண்டலத்தின் வெப்பநிலை இருக்க வேண்டிய அளவைவிட அதிகரிக்கும். இது பசுமைக்குடில் விளைவினால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்பாகும்.[1][2]
இயற்கையாக ஒரு சமநிலையில் இந்த வெப்பக்கதிர்வீச்சு நிகழும்போது, வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக் கொள்ளப்படுவதுடன், உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்றச் சூழலும் கிடைப்பதனால் இது இயற்கைப் பசுமை இல்ல விளைவு எனப்படும். ஆனால் மனிதர்களின் செயற்பாடுகளினால், வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, அவற்றின் விளைவாகப் பூமியின் வெப்பநிலை பாதகமான நிலையை நோக்கிச் செல்கின்றது[3]. இதனாலேயே பூமியில் உள்ள உயிரினங்களுக்குப் பாதகமான புவி சூடாதல் நிகழ்கின்றது.
பசுமை இல்ல வாயுக்கள் காபனீரொக்சைட்டு, மீத்தேன், நைதரசு ஆக்சைட்டு, ஓசோன், குளோரோ புளோரோ கார்பன் மற்றும் அதிக அளவிலான நீராவி போன்றவையாகும்.[4][5]