புச்சியித்தா தெத்துசுயா
From Wikipedia, the free encyclopedia
புச்சியித்தா தெத்துசுயா (அக்டோபர் 23, 1920 - நவம்பர் 19, 1998), (யப்பானிய மொழி:藤田哲也 Fujita Tetsuya) என்பவர் புயல் காற்று, இடி, சூறாவளி, கொடுங்குழல் காற்று போன்றவை பற்றி ஆய்வு செய்து புகழ் படைத்த யப்பானிய வானிலை அறிஞர்.
இவர் யப்பானில் புக்குவோக்கா மாகாணத்தில் கிட்டாகியூழ்சூ என்னும் ஊரில் பிறந்தார். இவர் கியூழ்சூ தொழில்நுட்பக்கல்லூரியில் படித்துப் பின்னர் அங்கேயே இணைப்பேராசிரியராக 1953 வரை இருந்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டு அங்குப் பேராசிரியராக இருந்தார்.
இவரின் புகழுக்கு முக்கியக் காரணம் இவர் பெயரால் கொடுங்குழல் காற்றின் (tornado) வலிமையை அளக்கும் ஒரு அளவீடு புச்சியித்தா அளவீடு என வழங்கப்படுகின்றது. ஒளியின் துணையால் அளக்கப்படும் முறைகளைக்கொண்டு கொடுங்குழற் காற்றில் வெவ்வேறு உயரங்களில் உள்ள காற்றின் வேகத்தை அளக்கும் முறைகளை இவர் வகுத்து 1971 இல் அறிமுகப்படுத்தினார். கொடுங்குழற் காற்றில் மணிக்கு 500 கி.மீ வேகம் உடைய சுழலிக் காற்றும் உண்டு. இவருடைய பெயரால் வழங்கும் புச்சியித்தா அளவீட்டில் F0,F1 என F5 வரை உள்ளன. இவர் பெயரால் 2007 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட புச்சியித்தா அளவுகோலும் அறிமுகப்படுத்தப்பட்டது.