From Wikipedia, the free encyclopedia
பாலித் தீவில் இந்து சமயம், இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் வாழும் பெரும்பான்மையான பாலி மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். பாலி மக்களின் நம்பிக்கைகளில் உள்ளூர் ஆன்மிகம், பித்ருபோஜனம் அல்லது பித்ருபட்சம் என்று அழைக்கப்படும் அவர்களின் இறந்த மூதாதையர்களின் வழிபாடு மற்றும் புத்த போதிசத்வர்கள் வழிபாடுகளும அடங்கும். இந்தோனேசியாவில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்களாக இருப்பினும், அதன் பாலித் தீவில் வாழும் பாலி மக்களில் 83% பாலி இந்துக்கள் ஆவார்.[1][2][3]
கிபி 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து பாலிக்கு இந்து சமயம் வந்தது.[4][5] பாலி, சுமத்திரா மற்றும் ஜாவாவில் புழங்கிய பௌத்த சமயத்தை இந்து சமயம் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டது. 14ம் நூற்றாண்டில், இஸ்லாம் சுமத்திரா மற்றும் ஜாவா தீவுகளில் பரவிய போது, இந்து சமயத்தினர் இசுலாமிற்கு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். இருப்பினும் பாலியின் தனித்துவமான இந்துப் பண்பாட்டின் அடையாளத்தின் காரணமாக, பாலித் தீவில் இந்து சமயம் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் பாலிக்கு அருகிலுள்ள சிறிய தீவுகளிலும் இந்து சமயம் பின்பற்றப்படுகிறது. மேலும் இந்துக்கள் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் இன்றளவும் ஜாவாவில் காணப்படுகிறது.
பாலித் தீவு இந்து சமயத்தின் அடிப்படை நம்பிக்கை தருமம் எனப்படும் உலகில் ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்கையாகும். இந்த ஒழுங்கை அழிக்கும் சக்தியே அதர்மம். இந்த இரண்டு சக்திகளையும் ஒன்றோடொன்று ஒத்திசைத்து, மறுபிறப்பு என்ற முடிவில்லாத சுழற்சியிலிருந்து முக்தி நிலைக்கு (பரமபதம்) தப்பிப்பதுதான் குறிக்கோள். பாலித் தீவு இந்து சமயம் பிரபஞ்சத்தை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கிறது. உயர்ந்த இடம் சொர்க்கம். இங்குதான் தேவர்கள் வசிக்கிறார்கள். அடுத்தது மனிதர்கள் வாழும் பூமி. இதற்குக் கீழே நரகம் என்ற இடம் உள்ளது. அரக்கர்கள் இங்கு வாழ்கின்றனர். பூமியில் உள்ள மக்களின் தவறுகளுக்கு (பாவங்களுக்கு) அவர்களின் ஆன்மா தண்டிக்கப்படுகிறது. இந்த மூன்று நிலைகளை மனித உடலிலும், பாலியில் காணப்படும் கோயில்களிலும் காணலாம். (தலை, உடல், கால்கள்).
இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் பிரம்மாவைத் தவிர, பாலி இந்துக்களுக்கு தனித்துவமான பல உள்ளூர் தெய்வங்களை வணங்குகின்றனர்.[6] சங் ஹியாங் விதி பாலி இந்துக்களால் மட்டுமே வழிபடப்படும் தெய்வம். பாரம்பரிய பாலி இந்து சமயத்தின்படி, அச்சந்தியா அல்லது சங் ஹியாங் விதி பிரம்மாவின் கருத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. பாலி இந்து மதத்தின் ஏகத்துவம் இந்தோனேசிய அரசின் முதல் கொள்கையான பஞ்சசீலத்துடன் [7] தொடர்புடையது. கோவில்கள் மற்றும் வீடுகளுக்கு முன்னால் காணப்படும் பத்மாசன கூடாரத்தின் மேல் உள்ள காலி இருக்கை சங் ஹியாங் விதி வாசாவுக்கானது. பாலி இந்து சமயத்தின்படி, சங் ஹியாங் வாசா விதி பல வடிவங்களைக் கொண்டுள்ளது. தேவிஸ்ரீ போன்ற தானியங்களின் (அரிசி) தெய்வங்கள், மலை தெய்வங்கள் மற்றும் கடல், ஏரி போன்றவற்றின் தெய்வங்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.
பாலி இந்து சமயத்தில் பூசாரிகள் மூன்று நிலைகளில் உள்ளனர்:பிராமண உயர் பூசாரிகள் மற்றும் பூசாரிகள் (பெமங்கு): மற்றும் விளக்கு பூசாரிகள் (பலியான்).
பாலி இந்து சமயத்தில் பஞ்ச மகாயக்ஞம் எனும் ஐந்து முக்கியச் சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பாலி இந்து சமயத்தினர் ஆகம இந்து தர்மம்; ஆகம தீர்த்தம். ஆகமமம் என்பது பாலியின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் இந்து சமயத்தின் வடிவங்களாகும். இது குறிப்பாக பாலித் தீவில் வசிக்கும் பாலி மக்களுடன் தொடர்புடையது. மேலும் உள்ளூர் மூதாதையர் வழிபாடு மற்றும் போதிசத்துவர்களுக்கான மரியாதை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து வழிபாட்டின் ஒரு தனித்துவமான வடிவத்தை பிரதிபலிக்கிறது.
ஜாவா மற்றும் மேற்கு இந்தோனேசிய தீவுகளில் அகழ்வாராய்ச்சியின் போது பழங்கால கோவில்கள் மற்றும் 8ம் நூற்றாண்டின் காங்கல் கல்வெட்டு, சிவலிங்கம், பார்வதி, விநாயகர், விஷ்ணு மற்றும் பிரம்மா சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.[8] கிபி 414ல் இலங்கையிலிருந்து சீனாவிற்குத் திரும்பிய ஃபா ஹியன் பற்றிய பண்டைய சீனப் பதிவுகள், ஜாவாவில் இந்து சமயத்தின் இரண்டு பிரிவுகளைக் குறிப்பிடுகின்றது.[6] அதே சமயம் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஆவணங்கள், சைலேந்ந்திர வம்சத்தின்[9] மன்னர் சஞ்சயன் ஆண்ட இந்து இராச்சியத்தை ஹோலிங் என்று குறிப்பிடுகின்றது.
கிபி 1400ல் இந்தோனேசிய தீவுகளில் உள்ள இராஜ்ஜியங்களை வணிக கடலோடிகளான அரபு முஸ்லீம் படைகளால் தாக்கப்பட்டன.[10] இந்தோனேசியா தீவுகள் 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில், அரபு சுல்தான்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. வடக்கு சுமத்ரா (ஆச்சே), தெற்கு சுமத்ரா, மேற்கு மற்றும் மத்திய ஜாவா மற்றும் தெற்கு போர்னியோவில் (கலிமந்தன்) நான்கு மாறுபட்ட மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சுல்தான்கள் தோன்றினர்.[11] தொடர் வன்முறைகளால் இந்தோனேசியாவின் பல தீவுகளில் இந்து-பௌத்த இராஜ்ஜியங்கள் மற்றும் சமூகங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.
சுல்தான்களிடமிருந்து தப்பிய இந்துக்களும், பௌத்தர்களும் பாதுகாப்பான தீவுகளில் சமூகங்களாக புலம்பெயர்ந்தனர். மேற்கு ஜாவாவின் இந்துக்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து பின்னர் பாலி தீவு மற்றும் அண்டை சிறிய தீவுகளுக்கு சென்றனர். இதனால் பாலி இந்து சமயம் தொடங்கியது.[12] சமய மோதல்கள் மற்றும் சுல்தான்களுக்கு இடையேயான போரின் இந்த சகாப்தம் வெளிப்பட்டுக் கொண்டிருந்த போது, புதிய அதிகார மையங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த போது, ஐரோப்பிய காலனித்துவம் வந்தது. 1602ல் இந்தோனேசிய தீவுக்கூட்டங்கள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்தின் கீழ் சென்றது.[13]
டச்சு காலனித்துவப் பேரரசு மதங்களுக்கு இடையிலான மோதலைத் தடுக்க உதவியது. மேலும் இந்தோனேசியாவின் பண்டைய இந்து-பௌத்த கலாச்சார அடித்தளங்களை, குறிப்பாக ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் மேற்குத் தீவுகளில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாக்கும் செயல்முறையை மெதுவாகத் தொடங்கியது.[14]
டச்சு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதும், இந்தோனேசியாவின் 1945 அரசியலமைப்பின் பிரிவு 29 அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்தது. பாலித் தீவு இந்துக்கள் இந்து மதத்தின் (நான்கு வேதம், உபநிடதம், புராணங்கள், இதிகாசம்) அடிப்படைக் கொள்கைகளை உருவாக்க உதவுவதற்காக பாலி மற்றும் இந்தியா இடையே மாணவர் மற்றும் கலாச்சார பரிமாற்ற முயற்சிகளைத் தொடங்கினர். குறிப்பாக பாலித் தீவில் 1950களின் நடுப்பகுதியில் அரசியல் சுயநிர்ணய இயக்கம் 1958 ஆம் ஆண்டின் கூட்டுக் கோரிக்கைக்கு வழிவகுத்தது. இது இந்தோனேசிய அரசாங்கம் பாலி இந்து சமயத்தை அங்கீகரிக்கக் கோரியது.[15][16] பாலித் தீவு இந்தோனேசியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே பகுதியாக மாறியது.[17][18]
பாலி மக்களின் கலைகள் மற்றும் சடங்குகளுடன் இந்து சமயத்தின் பல அடிப்படை நம்பிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. சமகாலத்தில், பாலியில் உள்ள இந்து சமயம் அதிகாரப்பூர்வமாக, இந்தோனேசிய மத அமைச்சகத்தால் ஆகம இந்து தர்மம் என்று குறிப்பிடப்படுகிறது.[19][20] வேதம், உபநிடதம், தீர்த்தம் மற்றும் மும்மூர்த்திகள் (பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்) பாலி இந்து சமயத்தின் ஆணி வேராகும். இந்தியாவைப் போலவே, பாலியிலும் இந்து சமயம் நெகிழ்வுத்தன்மையுடன் பல்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளது.[21] இது பல இந்திய ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கியது. இந்திய புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் புனைவுகள் மற்றும் தொன்மங்களை போற்றுகிறது. மூதாதையர் வழிபாடு போற்றப்படுகிறது. மிருக பலியில்லாத சமயச் சடங்குகள் கொண்டுள்ளனர்.
இந்தோனேசியப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் இந்து சமயத்தை ஒரு உன்னதமான வாழும் முறையாக விவரிக்கிறது. பாலித் தீவு இந்துக்கள் நாள்தோறும் மூன்று முறை கட்டாயப் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள். மேலும் இந்து மதம் சில பொதுவான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. அவை இஸ்லாத்தின் ஒரு பகுதிக்கு இணையானவை.
இந்து தர்மத்தில் காணப்படும் புனித நூல்களான வேதங்கள் மற்றும் உபநிடதங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் பாலித்தீவு இந்து சமயத்தின் ஆழமான நம்பிக்கை ஆகும்.[27] இராமயணம் நடன நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்படுகிறது. இந்தியாவைப் போலவே, இந்தோனேசியாவின் பாலி இந்து சமயம் ஆன்மீகத்தின் நான்கு பாதைகளான பக்தி யோகம், ஞான யோகம் (அறிவின் பாதை), கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் (தியானத்தின் பாதை). பக்தி மார்க்கம் பாலியில் பெரும் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.
இதேபோல் இந்தியய இந்துக்களைப் போலவே, பாலித் தீவு இந்துக்களும் மனித வாழ்க்கையின் நான்கு சரியான இலக்குகளான அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு எனும் நான்கு புருஷார்த்தங்களை நம்புகிறார்கள்..[22][23]
கருவுற்றது முதல் மரணம் வரை வாழ்க்கை தொடர்பான மொத்தம் பதின்மூன்று சடங்குகள் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் நான்கு கூறுகள் கொண்டது: தீய ஆவிகளை விரட்டுவது, புனித நீரால் சுத்திகரித்தல் மற்றும் பிரார்த்தனை. இந்த சடங்குகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பிறப்பு, பருவமடைதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கின்றன.[24][25]
புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மூதாதையரின் ஆன்மாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது மற்றும் அதன் வாழ்க்கையின் முதல் 42 நாட்களுக்கு கடவுளாக கருதப்படுகிறது. இருப்பினும் மகப்பேறு பெற்ற தாய் தூய்மையற்றவராக கருதப்படுகிறார். மேலும் இந்த காலகட்டத்தில் பெண்கள் எந்த சமயச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.
மரணச் சடங்குகள் மூலம் இறந்த மனிதனின் ஆன்மா விடுவிக்கப்பட்டு இறுதியில் மறுபிறவி எடுக்கப்படுகிறது. ஆன்மா அதை முழுவதுமாக விட்டுவிடுவதற்கு முன்பு உடலை எரிக்கப்படுகிறது.
மிக முக்கியமான திருவிழா கலுங்கன் (தீபாவளி தொடர்பானது), இது அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியின் கொண்டாட்டமாகும். இது பாலி பாவுகோன் நாட்காட்டியின்படி 210ம் நாளில் வருகிறது. பாரம்பரியத்தின்படி, இறந்தவர்களின் ஆவிகள் சொர்க்கத்திலிருந்து இறங்கி, பத்து நாட்களுக்குப் பிறகு குனிங்கனில் திரும்புகின்றது.
நெய்பி அல்லது அமைதி நாள். நெய்பி திருவிழா வழக்கமாக மார்ச் மாதத்தில் வருகிறது.
பாவுகோன் நாட்காட்டியின் கடைசி நாளான வடுகுனுங், கற்றலின் தெய்வமான சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது புத்தகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், படிக்க அனுமதி இல்லை. ஆண்டின் நான்காவது நாள் பேகர்வேசி என்று அழைக்கப்படுகிறது..[26]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.